ஜூலை 1, 2026 முதல், வங்கி, ரயில்வே, மற்றும் பாஸ்போர்ட் துறைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் நிதி மற்றும் பயணப் பழக்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரயில்வேத் துறை, பாஸ்போர்ட் மற்றும் வரி விதிப்புகள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் அவர்களின் பணப் பரிவர்த்தனைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், லோன் வாங்கியவர்கள், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் மற்றும் ரயில் பயணிகள் என அனைவரும் இந்த புதிய விதிகளினால் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.
26
இனி வாரந்தோறும் புதுப்பிக்கப்படும் கிரெடிட் ஸ்கோர்
வங்கத் துறையைப் பொறுத்தவரை, கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமாகவும் அதே சமயம் நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பக, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் (CIBIL) இனி மாதம் ஒருமுறை என்று இல்லாமல், வாரந்தோறும் (ஒவ்வொரு மாதமும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில்) புதுப்பிக்கப்படும். இதனால் நீங்கள் வாங்கிய கடனுக்கான இஎம்ஐ (EMI) அல்லது கிரெடிட் கார்டு பில் தொகையைத் தாமதமாகச் செலுத்தினால், அது உடனடியாக உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதித்துவிடும். அதே நேரத்தில், பணத்தைச் சரியாகச் செலுத்துபவர்களின் ஸ்கோர் மிக விரைவாக உயரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
36
லோன் கட்டணங்கள் ரத்து மற்றும் ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு
ஹோம் லோன், பர்சனல் லோன், கார் லோன் போன்ற ஃப்ளோட்டிங் வட்டி விகிதக் கடன்களை வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப முன்கூட்டியே அடைக்க விரும்பினால் (Pre-payment / Foreclosure), அதற்கு இனி எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரிய நிம்மதியைத் தரும். இது தவிர, ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது தொழில்நுட்பக் கோளாறால் கணக்கில் பணம் கழிந்து, கையில் பணம் வராமல் போனால், 5 நாட்களுக்குள் வங்கி அந்தப் பணத்தை வாடிக்கையாளரின் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும். தவறினால் வாடிக்கையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்படுகிறது. கிரெடிட் கார்டு பில்லிங் முறைகளும் இனி மிகவும் வெளிப்படையானதாக மாற்றப்படவுள்ளன.
ரயில் பயணிகளுக்கான புதிய மற்றும் கடுமையான அபராதங்கள்
ரயில் பயணங்களைப் பாதுகாப்பானதாகவும், ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு அபராதத் தொகைகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. இனி ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் சென்றால் விதிக்கப்படும் சாதாரண அபராதம் 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. கடுமையான விதிமீறல்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். அதேபோல், பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் 2,500 ரூபாயும், ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் 2,000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
56
பாஸ்போர்ட் கட்டண உயர்வு மற்றும் இலவச டிஜிட்டல் சேவைகள்
பாஸ்போர்ட் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பொறுத்தவரை, 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணங்கள் மற்றும் தட்கல் முறை கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. அதே சமயம், பொதுமக்கள் தங்கள் ஆதார் மொபைல் ஆப் தளம் வழியாக மின்னஞ்சல் (Email ID) முகவரியைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி தாக்கல் (ITR) செய்வதற்கான காலக்கெடு மற்றும் விதிகளும், கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் முறைகளும் இனி மிகவும் கடுமையானதாக்கப்பட வாய்ப்புள்ளது.
66
பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜூலை 1 முதல் வரவிருக்கும் இந்த மாற்றங்கள் அனைத்தும் நாட்டின் நிதி ஒழுக்கத்தையும் மக்கள் பாதுகாப்பையும் அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டாலும், ஆரம்பத்தில் சாமானிய மக்களுக்குச் சில நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தலாம். எனவே, பொதுமக்கள் தங்களின் லோன் இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளைத் தகுந்த தேதிகளுக்குள் செலுத்தி நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும், ரயில் பயணங்களின் போது விதிகளை முறையாகப் பின்பற்றுவதும் அவசியமாகும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.