தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் தமிழகம் முழுவதும் உள்ள கிரஷர்களில் இருந்து எடுத்துச்செல்லும் கனிமத்திற்கு உரிய அனுமதி சீட்டு வழங்க வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் மின்னணு சீட்டு (e-way bill) அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. செங்கல்சூளை உரிமையாளர்களால் செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் எளிதில் கிடைப்பதனை உறுதி செய்யும் விதத்தில் விதிகளை எளிமையாக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து சங்கத்தினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறை மற்றும் அரசினால் ஆய்வுசெய்யப்பட்டு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத குவாரிப் பணிகளை தடுப்பதில் இவ்வரசு உறுதியாக உள்ளது என்றும், விதிகளின்படி முறையாக மற்றும் நேர்மையாக குவாரி பணிகள் செய்யும் குத்தகைதாரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், வருங்காலங்களில் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதில் வெளிப்படை தன்மை இருப்பதினை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.