
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. பட்டதாரிகளுக்கு ரூ.4,000-ம், 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் இன்னமும் தொடங்கப்படவில்லை. இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஒரு திட்டம் தான். ஏற்கனவே உள்ள திட்டத்தில் தகுதிகள் இந்தத் திட்டத்திலும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
WhatsApp: வாட்ஸ்அப்பை இனி ஃப்ரீயாக பயன்படுத்த முடியாதா? மாதக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 என்பது தமிழக அரசால் முன்மொழியப்பட்ட ஒரு இளைஞர் நலத்திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகள், பட்டயப் படிப்பு முடித்தவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐஐடி முடித்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வேலையில்லாத அல்லது வேலை தேடுபவர்களுக்கு தற்காலிக நிதி உதவி அளிப்பதோடு அவர்கள் வேலை அல்லது திறன் மேம்பாடு வாய்ப்புகளை தேடும்பொழுது தங்கள் செலவுகளை சமாளிக்க உதவுகிறது.
இந்தத் திட்டம் ‘தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்’ என்கிற பெயரில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. பழைய உதவித்தொகையின்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தை மேம்படுத்தி தமிழக வெற்றிக்கழகம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பழைய திட்டத்தில் உதவி பெறுவதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவையே வரும்காலத்திலும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான முதல் தகுதியாக கல்வித் தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு சமமான தகுதியினர் (பட்டயப் படிப்பு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தோர் போன்றவர்கள்) பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் (பொறியியல், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் போன்ற தொழிற் படிப்புகள் நீங்கலாக) ஆகியவை கல்வி தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம்: விண்ணப்பதாரர் ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக் கூடாது.
வயது வரம்பு: வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பட்டியல் தயாரிக்கும் நாளில் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. ஆதிதிராவிட பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் தம்முடைய பள்ளிக்கல்வி அல்லது கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் படித்திருக்க வேண்டும். அவரது பெற்றோர்களின் ஒருவர் அல்லது காப்பாளர் பதினைந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசு அல்லது தனியார் துறையில் எந்த ஊதியம் பெரும் பணியிலோ அல்லது சுய வேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்து அல்லது அரசிடம் இருந்து வேறு எந்த வகையிலும் உதவித்தொகையை பெறுபவராக இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் அன்றாடம் கல்வி நிலையம் சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்வி கற்கும் விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தாது.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சான்று பெற்று மனுடன் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெற விண்ணப்ப படிவம் கிடைத்த 30 நாட்களுக்குள் மாவட்டத்திற்குள் தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் சேமிப்புக் கணக்கை தொடங்கி கணக்கு எண், கிளையின் முழு முகவரி, கிளை குறியீட்டு எண் (Branch Code), IFSC உள்ளிட்ட விவரங்களை விண்ணப்ப படிவத்தில் அமைந்துள்ளவாறு தெரிவிக்க வேண்டும். உதவித்தொகை காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு அந்தந்த காலாண்டு முடிவுற்ற பின்னர் விண்ணப்பதாரர்கள் கணக்கில் செலுத்தப்படும். விண்ணப்பதாரருக்கு 40 வயது முடியும் வரையிலும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது முடிவும் வரையிலும் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையை பெறுவதற்கு கீழ்காணும் ஆவணங்கள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, கல்வி மதிப்பெண் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, வங்கி பாஸ்புக் அல்லது கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வசிப்பிடச் சான்று (ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது மின் கட்டண ரசீதுகள்) வருவாய் அல்லது தாலுகா அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
முக்கிய குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வேலை வாய்ப்பற்றவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் நிபந்தனைகளாகும். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர்கள் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா? அல்லது இதே நிபந்தனைகளை கொண்டு புதிய அரசு உதவித்தொகை வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.