EPF பணத்தை எடுக்கும் முன் இ.பி.எஃப்வின் முக்கிய எச்சரிக்கையை அறிந்து கொள்ளுங்கள். இ.பி.எஃப் vs மியூச்சுவல் ஃபண்ட்டின் ஓய்வூதியம், வரி விலக்கு மற்றும் காப்பீடு பலன்கள் குறித்து பார்க்கலாம்.
EPF பணத்தை எடுக்க போறீங்களா? இ.பி.எஃப் வெளியிட்ட அறிவிப்பு
சம்பளம் வாங்கும் பலருக்கும் ஓய்வுக்கால சேமிப்பு குறித்து ஒரு பொதுவான குழப்பம் நீடிக்கிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) தொடர்வதா அல்லது அதிக வருமானம் தர வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதா என்பதே அந்தக் கேள்வி. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பே (EPFO) தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தெளிவாக விளக்கியுள்ளது.
இ.பி.எஃப். பணத்தை எடுக்கும் முன், அதன் உண்மையான பலன்களைப் புரிந்துகொள்வது அவசியம் என அந்த வீடியோவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டுமே நீண்டகால நிதி இலக்குகளுக்கு உதவினாலும், அவற்றின் அடிப்படை நோக்கமும், செயல்பாடும் முற்றிலும் வெவ்வேறானவை.
முதலாவதாக, இ.பி.எஃப். என்பது சட்டத்தின் கீழ் வரும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். EPF சட்ட வரம்புக்குள் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் கட்டாயமாக உறுப்பினராக வேண்டும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது முழுக்க முழுக்க ஒரு தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது. இ.பி.எஃப். திட்டத்தில், ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்படும்.
அதே அளவு தொகையை நிறுவனமும் தனது பங்களிப்பாகச் செலுத்தும். மியூச்சுவல் ஃபண்டில் நிறுவனத்தின் பங்களிப்பு என எதுவும் கிடையாது. மேலும், இ.பி.எஃப். கணக்கை ஓய்வுக்காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் நினைத்தவுடன் மூட முடியாது, ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை எப்போது வேண்டுமானாலும் விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம்.
இ.பி.எஃப். முதலீடுகளுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை அறிவிக்கும். இது பெரும்பாலும் பாதுகாப்பான, உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் முற்றிலும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தது. இதில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், அதே அளவுக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வரிச் சலுகைகளைப் பொறுத்தவரை, இ.பி.எஃப். முதலீடு, வட்டி, மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு, நடைமுறையில் உள்ள விதிகளின்படி மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) செலுத்த வேண்டியிருக்கும். இது பலரும் கவனிக்கத் தவறும் ஒரு முக்கிய அம்சம்.
ஓய்வூதியம் முதல் காப்பீடு வரை.. இ.பி.எஃப்-ன் இதர பலன்கள்
இ.பி.எஃப். என்பது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல. இதில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) மற்றும் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகியவற்றின் பலன்களும் கிடைக்கின்றன. இதன் மூலம், தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. ஒருவேளை உறுப்பினர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் மற்றும் EDLI திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
55
மியூச்சுவல் ஃபண்ட்டில் இதுபோல் பலன்கள் உண்டா?
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இதுபோன்ற ஓய்வூதியம், காப்பீடு போன்ற எந்த சமூகப் பாதுகாப்பு அம்சங்களும் கிடையாது. முதலீட்டாளர் இறந்தால், அவரது முதலீட்டின் அன்றைய மதிப்பு மட்டுமே நாமினிக்கு வழங்கப்படும். சுருக்கமாக, பாதுகாப்பான ஓய்வுக்காலத்தை விரும்புவோருக்கு இ.பி.எஃப். ஒரு சிறந்த அடித்தளமாக அமைகிறது. அதேசமயம், சந்தை அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்து, நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க விரும்புவோர் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பரிசீலிக்கலாம் என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.