தமிழகத்தில் தங்கம் வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை நெருங்குகிறது. சர்வதேச காரணங்களால் ஏற்படும் இந்த விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்பங்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக மக்களின் வாழ்வியலில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல; சேமிப்பு, பாதுகாப்பு, மரியாதை என பல அர்த்தங்களை கொண்ட ஒன்று. திருமணம், பூப்புனித நீராட்டு, வீட்டு விசேஷங்கள் என எந்த சுப நிகழ்ச்சியையும் தங்கம் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலைகள், நடுத்தர குடும்பங்களின் கனவுகளை நொறுக்கி வருகிறது. “இனி நகை வாங்குறது நமக்கு சாத்தியமே இல்லையா?” என்ற கேள்வி பலரின் மனதில் எழ ஆரம்பித்துள்ளது.
24
விலை உயர்வின் நிலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து, 12,460 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 720 ரூபாய் அதிகரித்து 99,680 ரூபாயை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை கடந்து விடும் என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 213 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
34
ஏன் இந்த திடீர் உயர்வு?
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை, டாலரின் ஏற்ற இறக்கம், போர் பதற்றங்கள் மற்றும் உலக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக தேர்வு செய்வதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பங்குச் சந்தை ஆட்டம் காணும் போது, முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் திரும்புவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. மகளின் திருமணத்திற்கு நகை சேர்க்க நினைத்தவர்கள், “சின்ன செட் போதும்” என சமாதானம் செய்து கொள்ளும் நிலை. சிலர் பழைய நகைகளை மாற்றி வேலை வாங்குவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நகைக்கடைகளிலும் முன்பை போல கூட்டம் இல்லாமல், விசாரித்து செல்லும் வாடிக்கையாளர்களே அதிகம்.
தங்கம் விலை உயர்வு என்பது சந்தையின் இயல்பான மாற்றமாக இருந்தாலும், அதன் தாக்கம் நேரடியாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களையே அதிகம் பாதிக்கிறது. “தங்கம் வாங்குவது கனவாகி விட்டதே” என்ற ஏக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. விலை நிலைபெறும் நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்போடு, பல குடும்பங்கள் தங்கள் ஆசைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டிய சூழலில் சிக்கியுள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.