Benefits of Piped Natural Gas : இந்தியாவில் சிலிண்டர் பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் பிஎன்ஜி கனெக்சன் குறித்தும், அதைப் பெறும் வழிமுறைகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஈரானில் நடந்து வரும் போர் சூழல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரானை கடந்து கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைவதற்கு தாமதம் ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்பு சிலிண்டர் முன்பதிவு செய்தால் சில தினங்களில் டெலிவரி செய்து விடுவார்கள். ஆனால் தற்போது 10 முதல் 25 நாட்கள் ஆனால் கூட சிலிண்டர் கிடைப்பதில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
26
எல்பிஜிக்கு மாற்று பிஎன்ஜி
மேலும் எரிவாயு விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களின் வாசல்களில் காலி சிலிண்டர்களை வைத்துக்கொண்டு மக்கள் காத்திருக்கக்கூடிய அவல நிலையும் உருவாகியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தொடர்ச்சியாக கூறி வந்த போதிலும் நிலைமை இன்னும் சீராகவில்லை. இந்த சூழலில் மத்திய அரசு எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டில் பிஎன்ஜி குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு பெறுவதற்கான வசதி இருந்தால் அதை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
36
பிஎன்ஜி (PNG) என்றால் என்ன?
பிஎன்ஜி (Piped Natural Gas) என்பது குழாய் வழி இயற்கை எரிவாயு என்பதன் சுருக்கம் ஆகும். சிலிண்டர்கள் மூலம் கேஸ் வாங்குவதற்கு பதிலாக தண்ணீர் குழாய் வசதி போல, நேரடியாக உங்கள் வீட்டிற்கு குழாய் மூலம் எரிவாயு வரும் ஒரு நவீன வசதியாகும். இந்த முறையில் சிலிண்டர் தீர்ந்து விடும் என்கிற கவலை இருக்காது. 24 மணி நேரமும் கேஸ் சப்ளை இருக்கும். எல்பிஜி சிலிண்டர்களை விட பாதுகாப்பானது. இயற்கை எரிவாயு காற்றை விட லேசானது என்பதால் ஒருவேளை கசிவு ஏற்பட்டாலும் காற்றில் விரைவாக கலந்து விடும்.
மின்சாரம் போல நாம் தேவைக்கு பணம் செலுத்தினால் போதுமானது. சிலிண்டர் போல முன்னரே பணம் செலுத்த தேவையில்லை. எவ்வளவு கேஸ் பயன்படுத்துகிறீர்களோ அதற்கு மட்டும் மாத இறுதியில் பணம் செலுத்தினால் போதும். சமையலறையில் பெரிய சிலிண்டர்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறிய மீட்டர் மற்றும் குழாய் மட்டுமே இருக்கும். நகரம் முழுவதும் பூமிக்கு அடியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு, சமையலறைக்கு ஒரு சிறிய இணைப்பு கொடுக்கப்படும். பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தப்படும். சாதாரண ஸ்டவ்வில் சில மாற்றங்கள் செய்து இது இணைப்பில் இணைக்கப்படும்.
56
விரைவில் அனைத்து நகரங்களிலும் பிஎன்ஜி சேவை
தமிழ்நாட்டின் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இந்த பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் அதிக அளவு பிஎன்ஜி உற்பத்தி செய்யப்படுவதால் இது போன்ற சூழல்களில் நமக்கு கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தியாவில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் இந்த இணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கொடுக்க வேண்டி இருக்கலாம். புதிய இணைப்பு பெறுவதற்கு தனியாக கட்டணம் கேட்பார்கள். தொழில்நுட்ப நிறுவன நிபுணர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து பிஎன்ஜி இணைப்பு வழங்கும் வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வார்கள்.
66
பிஎன்ஜி எவ்வாறு செயல்படுகிறது?
சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்ட பிறகு குழாய்களை பதிப்பது, கேஸ் மீட்டர் பொருத்துவது ஆகிய பணிகள் நடைபெறும். பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு உங்கள் வீட்டிற்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும். அதன் பின்னர் 24 மணி நேரமும் கேஸ் விநியோகம் சீராக வந்து கொண்டே இருக்கும். தற்போதைக்கு இது பெரிய நகரங்களில் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை விட பிஎன்ஜிக்கு ஒரு மாதத்திற்கு 20% வரை குறைவாகவே செலவாகும் என்று கூறப்படுகிறது. தற்போது வடசென்னை, மத்திய சென்னை, பெரம்பூர், ராயபுரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பிஎன்ஜி இணைப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.