
கட்டிட காட்டுக்குள் வசிக்கும் நாம் தொட்டிகளில் மரம் வளர்த்து பசுமை புரட்சி செய்து வருகிறோம். தொட்டியில் பூக்கும் பூக்களையும் காய்க்கும் காய்களையும் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கும் பலரால் மழைக்காக ஒரு மரக்கன்றை கூட நட முடிவதில்லை. சுற்றுப்புறச்சூழலை பற்றி கவலைப்படாமல் வாகனங்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கி குவித்து வருவோர் மத்தியில் ஒருசிலர் மரநடுவிழா நடத்தி உலகத்தை காப்பாற்ற நினைக்கின்றனர். நெல், கரும்பு மற்றும் தானியங்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் கூட தங்கள் வயல் ஓரங்களில் மரத்தை நடுவதில்லை.
இந்த நிலையில் மரம் வளர்க்க விரும்புவர்களுக்காக ஒருசில செயலிகள் உதவி செய்கின்றன. செல்போன் இல்லாதவர்களே இல்லை எனும் சூழல் தற்போது இருக்கும் நிலையில், இயற்கை ஆர்வலர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலிகள் உருகாக்கப்பட்டுள்ளன.இயற்கை ஆர்வலர்கள், நர்சரி கார்டன் வைத்துள்ளோர், வனத்துறையினர், மர வளர்ப்பு வல்லுநர்கள், அனுபவ விவசாயிகள் எனப் பலரும் மர வளர்ப்பைப் பற்றிச் சொல்வார்கள் என்றாலும், ஸ்மார்ட் போனிலேயே மரம் வளர்ப்பு குறித்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன. மரங்களை குறித்து தெரிந்துகொள்ள விரும்புவர்கள், மர வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைவரும் கீழ்கண்ட செயலியை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
தெரியாத மரங்களின் விவரங்களை அப்படியே அள்ளிக்கொடுக்கிறது இந்த லீப் ஸ்னாப் செயலி. வாக்கிங் செல்லும் போது சாலையோரம் இருக்கும் மரம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஒரு புகைப்படம் எடுத்து அதனை இந்த ஆப்பில் அப்லோடு செய்யலாம். இதனை தொடர்ந்து அந்த மரம் மற்றும் தாவரத்தின் அத்தனை விவரங்களையும் புட்டு புட்டு வைக்கிறது இந்த லீப் ஸ்னாப் ஆப். மரத்தின் பெயர், அதன் தாவரவியல் பெயர்,மருத்துவ குணம், பூர்வீகம் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் அள்ளித்தரும் இந்த செயலி மரம் வளர்போருக்கும், விவசாயிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
பொதுமக்களிடையே மர வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடந்த 2018-ல் அறிமுகமானது தான் 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்'. இதன் பெயரைப் போலவே மரங்கள் சார்ந்த அனைத்து விதமான தகவலையும் தன்னகத்தே தாங்கி நிற்கிறது இந்த செயலி.
நம்ம ஊர் விவசாயிகள் மற்றும் பாமரமக்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த செயலி மரம் வளர்ப்பு குறித்து அத்தனை தகவல்களையும் தமிழில் தருகிறது. மண் சார்ந்த மரம் எது? அது எந்த மண்ணில் வளரும்? எந்தச் சத்தை கொடுத்தால் சரளமாக வளரும்? என்பதை போன்ற பண்ணையம் சார்ந்த கேள்விக்களுக்கு இந்தச் செயலி முழுமையான தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.
தமிழக மரங்கள், மாநில மரங்கள், உள்நாட்டு மரங்கள், வெளிநாட்டு மரங்கள் என எல்லாவற்றையும் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதேபோல் மரங்கள், மரங்களின் புகைப்படங்கள், மரங்கள் வளர்க்கும் முறை, விதைப்பந்து, மானியம், அரசு திட்டங்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளதால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தெளிவான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் மரங்கள் குறித்து புதிதாக தெரிந்துகொள்வோருக்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும். மரங்களை எந்த காலத்தில் வளர்க்கலாம், நடவு செய்யும் முறை, கவாத்து அவசியமா, கன்றுகளை எப்படி உருவாக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த ஆப்பில் இருக்கின்றன. கூகுள் ப்ளே ஸ்டோரில் மரம் தமிழ் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டால் கிடைக்கிறது இந்த அற்புதமான செயலி.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட செயலி இது. இதில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் 22 மர வகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. 22 மர வகைகளின் தாவரவியல் பெயர்களோடு முகப்பில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் மரத்தின் தாவரவியல் பெயரை க்ளிக் செய்தால் அந்த மரத்தின் பயன்பாடுகள், சாகுபடி, கன்று உருவாக்கும் முறை, கிடைக்கும் மகசூலின் அளவு (ஹெக்டேரில்), மரப் பராமரிப்பு, மர வகையின் சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். மூங்கில், சவுக்கு, தேக்கு, வேம்பு, கிளரிசீடியா, வாகை, தைல மரம், மலைவேம்பு, கடம்பு உள்ளிட்ட 22 மர வகைகள் உள்ளன. இதன் சேவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். மர வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு நிபுணர்களைத் தொடர்புகொள்ளவும் வழிகாட்டுகிறது இந்தச் செயலி.
Grow-Trees.com – இந்த செயலி மூலம் நீங்கள் மரங்களை இணையத்தில் நடக்கலாம் மற்றும் அவற்றின் வளர்ச்சியை கண்காணிக்கலாம்.
Forest by SeekrTech – வனத்தை உருவாக்க உதவும் செயலி. நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஒரு மரம் வளர்ந்து காடாக மாறும்.
EcoMatcher – உலகின் பல பகுதிகளில் உண்மையான மரங்களை நடக்கலாம், மேலும் GPS மற்றும் புகைப்படங்களுடன் அவற்றின் வளர்ச்சியைப் பார்க்கலாம்.
Treeapp – நாள் தோறும் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, இலவசமாக ஒரு மரத்தை நடக்கலாம்.
Plant-for-the-Planet – இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி உலகளாவிய மரம் நடும் முயற்சிகளை கண்காணிக்க உதவுகிறது.