
வேத ஜோதிடத்தில் சனி பகவான் ‘கர்மகாரகன்’ என்று அழைக்கப்படுகிறார். அவர் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். ஒருவருக்கு சனி பகவான் கஷ்டங்களை கொடுக்கிறார் என்றால் அது அவரை பிடிப்பதில்லை என்று அர்த்தம் அல்ல. மாறாக ஒருவரை நல்வழிப்படுத்தவும், கடந்த கால வினைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், கர்ம வினைகளை கழிக்கவும் அவர் கொடுக்கும் பயிற்சியே ஆகும்.
சனி பகவான் சூரிய தேவன் மற்றும் சாயாதேவியின் புதல்வர் ஆவார். மிகவும் மெதுவாக நகரும் கிரகம் இதனால் அவர் ‘மந்தன்’ என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு ராசியை கடக்க அவர் சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அவர் ஒரு நீதிபதியைப் போன்றவர். தவறு செய்பவர்களை தண்டிப்பதும், உண்மையாக உழைப்பவர்களை உயர்த்துவதுமே அவரது கடமை. ஜோதிட ரீதியாக சில ராசிகளின் அதிபதிகளுக்கும் சனிக்கும் உள்ள பகைமை அல்லது நட்பு ரீதியான தொடர்பை பொறுத்து சில ராசிகள் சனிக்கு பிடிக்காதது என்று கருதப்படுகின்றன.
குறிப்பாக சனி பகவானின் தந்தை மற்றும் எதிரியாக கருதப்படுபவர் சூரியன். சூரிய பகவான் அதிபதியாக விளங்கும் சிம்ம ராசி சனி பகவானுக்கு எதிரி ராசியாக கருதப்படுகிறது. அதேபோல் செவ்வாய் பகவானும் சனி பகவானுக்கு பரம எதிரியாக கருதப்படுகிறார். சந்திர பகவானும் சனியன் எதிரி கிரகமாகும். இந்த கிரகங்கள் ஆளும் ராசிகளுக்கு சனி பகவான் எதிர்மறை பலன்களையே அதிகம் தருகிறார். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசியில் சனி பகவான் நீச்சம் அடைகிறார். நீச்சம் என்றால் ‘வலிமை இழத்தல்’ என்று பொருள். மேஷம் என்பது நெருப்பு ராசியாகும். மேலும் சனியின் பரம எதிரியான செவ்வாய் பகவான் மேஷ ராசியின் அதிபதியாவார். செவ்வாய் ஆவேசத்தையும், வேகத்தையும் குறிப்பவர். சனி பகவான் நிதானத்தை குறிப்பவர். மேஷ ராசிக்காரர்களின் அவசர புத்தியையும், முரட்டுத்தனத்தையும் கட்டுப்படுத்த சனி பகவான் பல தடைகளை ஏற்படுத்துவார். இதனால் இவர்கள் எடுக்கும் காரியங்கள் தாமதமாகும்.
சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். புராணங்களின்படி சூரிய பகவானுக்கும் அவரது மகனான சனி பகவானுக்கும் இடையே சமூகமான உறவு இல்லை. சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிகாரம், தலைமைப் பண்பு மற்றும் தற்பெருமை கொண்டவர்கள். சனி பகவான் பணிவையும், எளிமையையும் விரும்புவார். எனவே சிம்ம ராசிக்காரர்களின் அகந்தையை உடைக்க சனி பகவான் அவர்களுக்கு அதிக சோதனைகளைத் தருகிறார். குறிப்பாக ஏழரை சனி காலங்களில் இவர்கள் கடும் போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
சந்திர பகவானுக்கும், சனி பகவானுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம் தான். எனவே சந்திரன் ஆளும் கடக ராசிக்கு சனி பகவான் குறைந்த பலன்களே வழங்குகிறார். சனிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பு ‘புனர்ப்பு தோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் மனதை குறிப்பவர். சனி பகவான் துக்கத்தைக் குறிப்பவர். கடக ராசிக்காரர்கள் மிகவும் மென்மையானவர்கள். சனி பகவான் இவர்களை ஆட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், தனிமையும் கொடுத்து மனதளவில் அவர்களை பக்குவப்படுத்துவார்.
சனி பகவான் சில ராசிகளுக்குப் கஷ்டங்களைத் தருவதற்குப் பின்னால் ஆழ்ந்த வாழ்வியல் பாடங்கள் உள்ளன. ‘நான்’ என்ற அகந்தை யாரிடம் அதிகம் இருக்கிறதோ, அவர்களை சனி பகவான் அதிகம் சோதிப்பார். அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள், பொறுமை இல்லாதவர்களுக்கு தடைகளை உருவாக்கி நிதானத்தை கற்றுக் கொடுப்பார். போலி உறவுகள், நிலையற்ற செல்வத்தைக் காட்டி வாழ்க்கையின் நிலையாமையை உணர வைப்பார். சோம்பேறிகளாக இருப்பவர்களுக்கு கடின உழைப்பின் அர்த்தத்தை சொல்லிக் கொடுப்பார். எவ்வளவு சோதனை கொடுத்தாலும் இறுதியில் அவர் நற்பலன்களை வழங்குவார்.
சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு சில எளிய வழிகள் உள்ளன. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது, சனி பகவானுக்கு மகிழ்ச்சி தரும். அவர் ஏழைகளின் பிரதிநிதி என்பதால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், வறியவர்களுக்கு உதவுவதை அவர் அதிகம் விரும்புகிறார். சனியின் பிடியிலிருந்து தப்பிக்க விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு சிறந்த வழியாகும். சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். நேர்மையாகவும், தர்மத்தின் வழியில் நடந்தால் சனி பகவான் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.
சுருக்கமாக சொன்னால் சனி பகவான் எந்த ராசிக்கும் எதிரி அல்ல. அவர் ஒரு கடுமையான ஆசிரியர். சிம்மம், மேஷம் போன்ற ராசிகள் சனியின் குணத்திற்கு நேர்மாறான குணங்களைக் கொண்டிருப்பதால் அவர்கள் சனியின் பிடியல் சிக்கும் பொழுது அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சனி பகவான் அவர்களுக்கு கடுமையான பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு நேர்மையாக உழைத்தால், சனி பகவானை போல அள்ளிக் கொடுப்பவர் வேறு யாருமில்லை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)