
பெரும்பாலான ஜோதிடர்கள் திருக்கணித பஞ்சாங்க முறையை பின்பற்றுகின்றனர். இதே போன்று தான் ஆலங்குடி போன்ற குரு பகவானுக்குரிய வழிபாட்டு தலங்களில் வாக்கிய பஞ்சாங்க முறை பின்பற்றப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குரு பெயர்ச்சியானது வரும் ஜூன் 2ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து உச்ச வீடான கடக ராசிக்குள் அதிகாலை 2.25 மணிக்கு நுழைகிறது.
இதே போன்று வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குரு பெயர்ச்சியானது வரும் ஜூன் 12 ஆம் தேதி நிகழ்கிறது. திருக்கணித முறை அடிப்படையில் ஏசியாநெட் நியூஸ் தமிழில் குரு பெயர்ச்சிக்கான பலன் கணக்கிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இப்போது மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி 2026 பலன் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியானது மேஷ ராசி நேயர்களுக்குப் பல்வேறு ஆச்சரியமான மாற்றங்களை வழங்கப்போகிறது. இந்த பெயர்ச்சியின் போது, குரு பகவான் மிதுன ராசியிலிருந்து வெளியேறி, தனது உச்ச வீடான கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷ ராசியைப் பொறுத்தவரை, குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமான 'சுக ஸ்தானத்தில்' அமர போகிறார். இதனால் மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலங்கள் நடக்கும் என்பதை பார்க்கலாம்…
பொதுவாக 4ஆம் இடம் என்பது வண்டி, வாகனம், வீடு, ஆடம்பர வாழ்க்கை போன்ற சுக போகங்களை குறிக்கும் இடம். குரு பகவான் உச்சம் பெற்று அமர்வதால், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்கள் நீண்ட நாள் கனவு நனவாகும். பழைய வீட்டைப் புதுப்பித்து புதிய வீடு கட்டும் சூழல் உருவாகும். மேலும், சொந்தமாக இடம் இருந்தால் அதில் புதிதாக வீடு கட்டும் யோகம் தேடி வரும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் விழுவதால், பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இழுபறியில் இருந்த பாக்கிகள் அனைத்தும் இப்போது தடையின்றி உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார ரீதியாக இது ஒரு திருப்திகரமான காலகட்டம்.
தாய் வழி உறவினர்களான மாமன், மைத்துனர் வழியிலிருந்து வந்த நீண்ட கால மனக்கசப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அடியோடு மறையும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் உறவுகளிடையே அன்யோன்யம் அதிகரித்து, மீண்டும் ஒற்றுமை பலப்படும். உங்கள் தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவரது ஆரோக்கியம் சீராவதால் உங்கள் மனக்கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம், காதுகுத்து, அல்லது புதுமனைப் புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் குருவின் அருளால் எந்தத் தடையும் இன்றி இனிதே நடைபெறும். உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே உங்கள் மீதான பார்வை மாறும். உங்கள் சொல்லுக்கு மதிப்பும், சமூகத்தில் கௌரவமும் உயரும். சுப காரியங்களில் உங்கள் ஆலோசனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த ஈகோ மற்றும் சின்னச் சின்னப் பூசல்கள் மறைந்து, ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து கொள்வீர்கள். பரஸ்பர அன்பால் இல்லற வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.
அலுவலகத்தில் இதுவரை இருந்த வேலைப்பளு வெகுவாகக் குறையும். "வேலைக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே" என்று வருந்தியவர்களுக்கு, இப்போது மேலதிகாரிகளின் பாராட்டும், உரிய கௌரவமும் தேடி வரும். உங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றியாக இது அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவான பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கைகூடி வரும். ஒரு சிலர் தாங்கள் விரும்பிய ஊருக்கோ அல்லது துறைக்கோ இடமாற்றம் பெற்று மனநிறைவடைவீர்கள்.
சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது 'வசந்த காலம்'. புதிய முதலீடுகளைச் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களின் திட்டமிடப்பட்ட உழைப்பு, எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும். குறிப்பாக ரியல் எஸ்டேட், கட்டிடக் கட்டுமானம் மற்றும் ஹோட்டல், உணவு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இது ஜாக்பாட் காலமாகும். புதிய ஆர்டர்கள் குவியும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து பொருளாதார நிலை உச்சத்தைத் தொடும். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகள் நீங்கி, ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். மருந்து, மாத்திரைகளின் செலவு குறையும்.
"ஆரோக்கியமே பாக்கியம்" என்பதற்கேற்ப, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். ஓயாத சிந்தனை மற்றும் கவலைகளால் ஏற்பட்ட மன அழுத்தம் மறைந்து, மனம் அமைதியடையும். எதையும் பாசிட்டிவாக அணுகும் பக்குவம் உண்டாகும். ஆழ்ந்த உறக்கமும், மனத் தெளிவும் உங்கள் உற்சாகத்தை இரட்டிப்பாக்கும். மாணவ மாணவியர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலகட்டம். பாடங்களை எளிதில் கிரகிக்கும் ஆற்றல் கூடும். தேர்வுகளில் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்களைப் பெற்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. கல்லூரிப் படிப்பு அல்லது உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவும், கல்லூரியும் அமையும்.
குறிப்பாக வெளிநாட்டில் சென்று படிக்க விரும்புபவர்களுக்குத் தடைகள் நீங்கி விசா மற்றும் இதர ஆவணங்கள் எளிதில் கிடைக்கும். கேது பகவானை அதிபதியாகக் கொண்ட அஸ்வினி நட்சத்திர அன்பர்களூக்கு புதிய திருப்பமாக இந்த குரு பெயர்ச்சி அமையும். இதுவரையில் இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபாடு செய்யலாம்.
சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட பரணி நட்சத்திர மேஷ ராசியினருக்கு உங்கள் வாழ்வில் வசதி வாய்ப்புகள் பெருகும் ஒரு காலகட்டம். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமண முயற்சிகள் கை கூடும். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது நிர்வாகத் திறமையை அதிகரிக்க செய்யும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதும், சிவபெருமானை வழிபடுவதும் உன்னதமான பலன்களைத் தரும்.
வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு சென்று, குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம். நெய் தீபம் ஏற்றி அவரை வணங்குவது உங்கள் வாழ்வின் தடைகளை நீக்கும்.
குரு பகவான் அறிவிற்கும், கல்விக்கும் அதிபதி என்பதால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் கல்விச் செலவிற்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். நோட்டுப் புத்தகங்கள், பேனா, கல்விக்கட்டணம் செலுத்துவது போன்ற நற்செயல்கள் உங்களுக்குக் கோடி புண்ணியத்தைத் தரும்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது, மஞ்சள் நிற உணவுகளை தானமாக வழங்குவது குருவின் அருளைப் பெற்றுத் தரும். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று தரிசிப்பதும், அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்குவதும் குரு தோஷத்தை நீக்கி வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும்.