
இந்து மதத்தில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமானது. கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு ஜோதிட கணிப்புகள் கூறப்படுகின்றன. ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்படும் ஒரு வரைபடமாகும். ஒவ்வொரு கோள்களும் ஜாதகர் பிறந்த நேரத்தில் எந்த ராசியில்? எந்த வீட்டில் இருந்தன? என்பதை இந்த கணிப்பு கூறுகிறது. ஜாதகத்தை வைத்து ஒருவரின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஜாதகம் என்பது ஒருவருடைய உடல்நலம், கல்வி, தொழில், ஆளுமை, திருமணம், செல்வம், உறவுகள் போன்ற வாழ்வின் பல்வேறு அம்சங்களை ஆராய உதவுகிறது.
தற்போது பலருக்கும் ஜாதகம் எழுதுவது குறித்து சந்தேகங்கள் நீடிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எப்போது பலன்கள் பார்க்க வேண்டும்? என்பது குறித்த பல குழப்பங்கள் இருக்கிறது. பொதுவாக ஜாதகம் எழுதுவதற்கு இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுடைய ஜாதகத்தை எழுதி விடுகின்றனர். இது குழந்தையின் ராசி, நட்சத்திரம், ஆரம்ப கால வாழ்க்கை குறித்த பலன்களை அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுப்பதற்கும் இது உதவுகிறது. சிலர் குழந்தை பிறந்த 10 முதல் 12 வயது வரை ஜாதகத்தை கணக்கிட்டு பார்க்க கூடாது என கருதுகின்றனர்.
குழந்தைகள் 10 முதல் 12 வயது வரை வளரும் பருவத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் ஜாதகம் பார்ப்பது என்பது பயத்தை உருவாக்கலாம் என்றும், இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கையான நிகழ்வுகள் என்பதால் ஜாதகம் பார்க்க தேவையில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு எப்போது ஜாதகம் எழுத வேண்டும், எப்போது பலன்கள் பார்க்க வேண்டும் என்பது குறித்து பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். அவர் கூறியது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேச மங்கையர்கரசி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், “குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதுவதற்கு சில பொது நியதிகள் உள்ளன. சில குடும்பத்தில் குழந்தைகள் பிறந்தவுடனேயே ஜாதகம் எழுதுவது வழக்கம். அந்த வழக்கம் உள்ளவர்கள் உங்கள் குடும்ப வழக்கத்தை மாற்றாமல் அப்படியே பின்பற்றுங்கள். முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த வழக்கத்தை மாற்றக்கூடாது. அதே சமயம் குடும்ப வழக்கம் எதுவும் இல்லாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் பொதுவான நியதியை பின்பற்ற வேண்டும். அதன்படி ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் குழந்தை பிறந்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னரே ஜாதகம் எழுத வேண்டும்.
ஜாதகம் எழுதி முடித்த பின்னர் உடனேயே அதை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் அருகே பலன்கள் கேட்பது கூடாது. பல ஜோதிடர்கள் இளம் வயது பாலகர்களுக்கு பலன்கள் கூறுவது கிடையாது. ஏதாவது உடல்நலப் பிரச்சனை அல்லது பிற பிரச்சனைகள் என்றால் மட்டுமே குழந்தைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பலன்கள் பார்க்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லை என்றால் 12 வயது வரை பலன்கள் பார்க்கக் கூடாது. பாலகர்களாக இருக்கும் சிறுவர்களின் செயல்கள் அனைத்தும் தெய்வத்தின் சங்கல்பத்தின்படியே நடப்பதால் குழந்தைகளுக்கு 12 வயது வரை பலன்கள் பார்த்தல் கூடாது.
அதே சமயம் பெண் குழந்தைகளுக்கு இதில் சில விதிவிலக்குகள் உண்டு. பெண் குழந்தைகள் பிறந்து ஒரு வயது முடிந்த பின்னர் ஜாதகம் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பூப்படையும் வயது வரை பலன்கள் பார்க்கக் கூடாது. அதே சமயம் பூப்படைந்த பின்னர் அந்த நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு ருது ஜாதகம் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். சில மணமகன் வீட்டார் ருது ஜாதகம் கேட்கும் பட்சத்தில் பின்னாளில் இது பலன் அளிக்கலாம். ஆண் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதி அதை பூஜை அறை அல்லது பீரோவில் வைத்து விடுவது நல்லது. தேவை ஏற்பட்டால் மட்டுமே பலன்கள் பார்க்க வேண்டும். இல்லை என்றால் 12 வயது வரை பார்க்கக்கூடாது. உயர் படிப்பு, வெளிநாடு செல்லுதல், அவசர தேவைகளுக்காக பலன்கள் பார்க்கலாம். இல்லையென்றால் திருமணத்தின் பொழுது பொருத்தம் எடுப்பதற்கு ஜாதகத்தை வெளியில் எடுத்தால் போதுமானது” என அவர் விளக்கியுள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)