
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இயற்கையிலேயே அமைந்திருக்கும். சிலர் எப்போதுமே பாசிட்டிவான எண்ணங்களுடனும், சுற்றியிருப்பவர்களிடம் அதிக அன்புடனும் பழகுவார்கள். ஆனால், இதற்கு நேர்மாறாக சில ராசியினர் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு சவாலான அல்லது எதிர்மறையான சூழலை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் குணம் கொஞ்சம் கடினமானது மற்றும் குழப்பமானது என்பதால், இவர்களை ஆபத்தானவர்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. இவர்களிடமும் அளவற்ற பாசமும், பிறருக்கு உதவும் குணமும் ஒளிந்திருக்கும். இருப்பினும், ஜோதிட ரீதியாக எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக சிக்கல்களையும், சலசலப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
போர்க்குணம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்களிடம் துணிச்சலும், எதையும் சாதிக்கும் லட்சிய வெறியும் அதிகமாக இருக்கும். நினைத்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். இவர்களின் சிக்கலான குணமே இவர்களது முரட்டுத்தனமான கோபமும், அவசர புத்தியும்தான். மிகச் சாதாரண விஷயங்களுக்குக் கூட பெரிய அளவில் சண்டையிட்டு, சுற்றியுள்ள சூழலையே பதற்றமாக மாற்றிவிடுவார்கள்.
விருச்சிக ராசியை ஆளும் கிரகங்களான செவ்வாய் மற்றும் புளூட்டோ, இவர்களுக்கு அதீத ஆற்றலையும், தீவிரமான குணத்தையும் வழங்குகின்றன. பொதுவாகவே இவர்கள் தங்களின் ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்ப மாட்டார்கள். அதேசமயம், மற்றவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பார்கள். யாராவது இவர்களுக்குத் துரோகம் செய்தால், அதை எளிதில் மறக்க மாட்டார்கள்; சரியான நேரம் பார்த்து பழிவாங்கும் குணம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். இவர்களின் அதீத சந்தேக புத்தியும், பொறாமை குணமும் இவர்களது உறவுகளில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும்.
புதன் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள், சிறந்த பேச்சுத்திறனும் கலகலப்பான நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். ஆனால், இவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பலவீனமே இவர்களின் இரட்டை மனநிலை (Dual Personality) தான். ஒரே நேரத்தில் இரண்டு விதமாகச் சிந்திப்பார்கள். ஒரு நிமிடம் உங்களின் உற்ற நண்பராகப் பழகும் இவர்கள், அடுத்த நிமிடமே அதற்கு நேர்மாறாக மாறி உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்கள். இவர்களின் இந்த கணிக்க முடியாத சுபாவமே இவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும்.
கர்ம வினைகளின் கிரகமான சனியின் ஆதிக்கத்தைப் பெற்ற மகர ராசிக்காரர்கள், மிகுந்த உழைப்பாளிகளாகவும், எதார்த்தவாதிகளாகவும் திகழ்வார்கள். வெளியில் பார்க்க மிகவும் கண்டிப்பானவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் தெரிந்தாலும், உள்ளுக்குள் பாசமுள்ளவர்கள். ஆனால், இவர்களின் ஒட்டுமொத்த கவனமும் வெற்றி மற்றும் அந்தஸ்தின் மீதே இருக்கும். தங்களின் இலக்குகளை அடைவதற்காக, சில நேரங்களில் சொந்த பந்தங்களையும், உணர்வுகளையும் கூட தூக்கி எறிந்துவிட்டு முன்னேறத் துணிவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.