
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ, அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸ் அணியின் கேப்டன் கைலியன் எம்பாப்பே ஆகியோரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். "சாதனைகளைத் தாண்டி, கால்பந்துக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. உலகக் கோப்பையின் ஆல்-டைம் டாப் ஸ்கோரர்கள் பட்டியலில் இடம்பெற இருவருமே தகுதியானவர்கள்," என்று அவர் கூறியுள்ளார். இந்திய நேரப்படி ஜூலை 1 ஆம் தேதி நடைபெற உள்ள ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பிரான்ஸ் அணி, சுவீடன் அணியுடன் மோதுகிறது.
L'Equipe பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொனால்டோ பேசியதை Goal.com வெளியிட்டுள்ளது. அதில் அவர், "ஒரு வீரர் விட்டுச்செல்லும் பாரம்பரியம் தான் முக்கியம். அந்த வகையில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே இருவரும் புள்ளிவிவரங்களைத் தாண்டிய வீரர்கள்," என்றார்.
மெஸ்ஸியைப் பற்றிப் பேசுகையில், "கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவர். இன்றும் களத்தில் அவரது தாக்கம் அதிகமாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.
எம்பாப்பேவுக்கு ரொனால்டோ சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்தார். "எம்பாப்பேயின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, என் இளம் வயதில் நான் ஆடியது போலவே இருக்கிறது. அவர் இன்றைய கால்பந்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். ஜாம்பவான்களின் உண்மையான வாரிசு அவர்தான்," என்று ரொனால்டோ புகழ்ந்துள்ளார்.
இந்த 2026 உலகக் கோப்பையில் செனகலுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்த எம்பாப்பே, ஈராக்கிற்கு எதிரான அடுத்த போட்டியிலும் இரண்டு கோல்கள் அடித்தார். நார்வேக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்கவில்லை என்றாலும், இரண்டு கோல்கள் அடிக்க உதவி (assist) செய்து அசத்தினார்.
கோல்டன் பூட் மற்றும் கோல்டன் பால் விருதுகளுக்கான போட்டியில் மெஸ்ஸியுடன் எம்பாப்பேயும் முன்னணியில் இருக்கிறார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ், தனது தாயாரின் மறைவையொட்டி சொந்த ஊர் சென்றிருந்தார். இதனால் நார்வேக்கு எதிரான இறுதி குரூப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளர் கை ஸ்டீஃபன் அணியை வழிநடத்தினார். தற்போது டெஷாம்ப்ஸ் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார் என்று பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு (FFF) சனிக்கிழமை அறிவித்துள்ளது.