
வில்லியனூரில் வீதியில் திருமண நாள் கொண்டாடியதைத் தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்(எ) மணிகண்டன் (28). ஏசி மெக்கானிக் வேலை செய்யும் இவருக்குக் கடந்த 4 மாதத்துக்கு முன்பு மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சங்கர். நேற்று இரவு சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் திருமண நாளையொட்டி வீதியில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
அப்போது ரமணியின் உறவினர் ராஜா (26) மற்றும் அவரது நண்பர்களான தென்னல் பகுதியைச் சேர்ந்த அசார்(23), தமிழ்ச்செல்வன் (23) ஆகியோர் மது அருந்திவிட்டுப் பொதுமக்களுக்கு இடையூறாகத் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது வீட்டின் வெளியே நின்று போன் பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த அசார், தமிழ்ச்செல்வன், ராஜா, சங்கர் ஆகியோர் சதீஷைக் கத்தியால் தொண்டை, வயிற்றுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, அந்த கொலை தொடர்பாக பதுங்கியிருந்த அசார், தமிழ்ச்செல்வன், ராஜா, சங்கர், அவரது மனைவி ரமணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமண நாள் கொண்டாடியதைத் தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.