
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்தது தொடர்பாக 10 மணிநேர விசாரணைக்கு பிறகு 2 காவலர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த 18ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஆட்டோவில் வந்த சுரேஷ், விக்னேஷ் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த இருவரிடமும், காவல்துறையினர் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், போலீஸார் அவர்களை சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையின்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார்விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். மறுநாள் விசாரணையின் போதே விக்னேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிட்டார்.
இந்நிலையில், விக்னேஷ் மரணம் தொடர்பாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து, விக்னேஷ் மரணம் தொடர்பாக 9 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில காவலர்கள் கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.