வாழவேண்டி வயசுல 2 பேரும் செத்துட்டாங்களே... யார் செஞ்சிருந்தாலும் மன்னிக்க கூடாது...மாணவிக்காக வருந்தும் திருமா

By sathish kFirst Published Jun 12, 2019, 11:21 AM IST
Highlights

முகநூல் பக்கங்களில் தாறுமாறாகப் பதிவுகள் வெளியிடுவது, புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு, அதனால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. வாழ வேண்டிய பருவத்தில் 2 பேர் பலியாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது என திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி பன்னீர், அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார்  வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் விக்னேஷ் உதவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை பழிவாங்க திட்டமிட்டனர். அதுமட்டுமின்றி, ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் நீலகண்டன், அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து விட்டதாகக் கூறி, அந்த படத்தையும் காட்டியுள்ளனர். அத்துடன் அவர் மணம் முடிக்கவுள்ள விக்னேஷை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ் அடித்து கொலை செய்யப்பட்டு, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல் தான் விக்னேஷை கொடூரமாக படுகொலை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது நாடக காதல் கும்பலின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்று பகிரங்கமாகவே விக்னேஷ் மரணத்துக்குக் காரணம் விசிகவைச் சேர்ந்த நிர்வாகி என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில், சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நெய்வேலி அருகே குறவன்குப்பன் கிராமத்தில் கல்லூரி மாணவி ராதிகா, அவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்த விக்னேஷ் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இரு உயிர்களும் பலியாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்த அரசும் அதிகாரிகளும் இடம்கொடுத்துவிடக் கூடாது. அதேபோல சமூக வலைதளங்கள் ஆக்கபூர்வச் செயல்களுக்குப் பதிலாக சமூக சீர்கேடுகளுக்குப் பயன்படுவது வேதனையளிக்கிறது. 

முகநூல் பக்கங்களில் தாறுமாறாகப் பதிவுகள் வெளியிடுவது, புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு, அதனால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. வாழ வேண்டிய பருவத்தில் 2 பேர் பலியாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பரவிவரும் தீங்காக சமூக வலைதளக் கருத்துகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன், மத்திய அரசு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக உரிய வரையறைகளை வகுக்க வேண்டும். சமூக சிக்கல்கள் எழாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரபு நாடுகளில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்த கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அங்கு ஆபாச வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத அளவு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதை ஏன் இந்திய அரசு பின்பற்றக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

click me!