
நெல்லை அருகே கோயில் திருவிழாவில் பேனர்களை அகற்றுவது தொடர்பான தகராறில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் திருவிழா
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டதை காவல் துறையினர் அகற்ற முயன்றனர். இதனால், ஆறுமுகம் என்பவர் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கத்திகுத்து
அப்போது, எதிர்பாராத விதமாக ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை கழுத்தில் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற ஆறுமுகத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறி ஆறுமுகம் என்பவர் மீது உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசா ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்திருந்தார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.