காதலித்தவரை கைவிட்ட ஆசிரியை… வேறு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம்…கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்….

By Selvanayagam PFirst Published Nov 2, 2018, 9:07 AM IST
Highlights

திருவிடைமருதூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை ஒருவரை அவரது காதலன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா இவர் கும்ப கோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் வசந்தபிரியா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் வழக்கம்போல் வசந்தபிரியா பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் இவர் பள்ளிக்கு பணிக்கு வந்தார்.

மாலையில் பள்ளி முடிந்ததும் வசந்தப் பிரியா பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அங்கு வந்து வசந்த பிரியாவை  அழைத்துச் சென்றார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் காவிரி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்த பிரியாவின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

அங்கு யாருடன் அவர் வந்தார்? அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்பது குறித்து இது வரை சரியான தகவல் தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்தன. அவற்றை திருவிடைமருதூர் போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞரும், வசந்தப் பிரியாவும் காதலித்து வந்ததாகவும், ஆனால் வசந்த பிரியாவுக்கு வேறு ஒருவருடன் கடந்த வாரம் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது குறித்து பேசுவதற்காக அந்த இளைஞர் பள்ளிக்கு வந்து வசந்தப்பிரியாவை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வசந்த பிரியா கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

click me!