தேவாலயத்துக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தேவாலயத்துக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவின் மலான்கரா பகுதியில் உள்ள ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ தேவாலயத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு முன்பு செய்த தவறுக்காக பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்க வந்தபோது அவரின் வாக்குமூலத்தை வைத்து பிளாக்மெயில் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பாதிரியார்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 2ஆம் தேதி அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட நான்கு பாதிரியார்களில் இரண்டு பேர் சரணடைந்த நிலையில் மற்ற இரு பாதிரியார்களான சோனி வர்கீஸ் மற்றும் ஜைஸ் கே ஜார்ஜ் இருவரும் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர்.
கேரள உயர் நீதிமன்றம் அவர்களது முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். . கடந்த ஜூலை 19ஆம் தேதி பாதிரியார்களின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாதிரியார்கள் சார்பில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பாதிரியார்களின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவர்களை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் ரத்து செய்தனர். அதைத் தொடர்ந்து இரு பாதிரியார்களும் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் சரணடைந்த பின் ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.