சுபஸ்ரீ மறைவு... பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் இப்படி பண்ணிட்டு போயிட்டாரே..!

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2019, 2:49 PM IST
Highlights

சாலை நடுவில் பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் தலைமறைவாகி உள்ளார். 

தலைநகரில் ஏற்பட்ட சுபஸ்ரீயின் இறப்பு தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாள் தோறும் எத்தனையோ சாலை விபத்துக்கள் எதிர்பாராமல் நடக்கிறது. ஆனால் சுபஸ்ரீயின் மரணத்தை அத்தனை எளிதாக நம்மால் கடந்து செல்ல முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த நிலையில் சாலை நடுவில் பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் தலைமறைவாகி உள்ளார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜை கைது செய்தனர்.

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். விபத்து மதியம் 2.30 மணிக்கு நடந்த நிலையில் மாலை 6 மணிக்குதான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பந்தப்பட்டவர் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் எந்த மாதிரியான செக்‌ஷனில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதன்பிறகே வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

சம்பந்தப்பட்டவர் கைதானாலும் ஜாமீனில் வெளியே வரக்கூடிய செக்‌ஷனில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது பொது மக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே சம்பவம் வேறு நபராக இருந்தால் சட்டம் 363 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பார்கள். ஆனால் இங்கு அந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் அவரை உடனே கைது செய்ய போலீசாரால் முடியவில்லை. இந்த வி‌ஷயத்தில் உயர் அதிகாரிகள் என்ன சொல்வார்களோ என்று தயக்கம் காட்டி வந்தனர். ஜாமீனில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்திருந்தாலும் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது.

இதனால் நீதிமன்றத்திற்கு பயந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில் ஜெயகோபால் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருவதாக தற்போது போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்துக்கு காரணமான பேனரை தயார் செய்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் வினாயகபுரத்தில் உள்ள சண்முகா டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டிக்கர் அச்சகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த பேனர்களை முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நேரடியாக சென்று வீதிகளில் வைக்கவில்லை. இதற்காகவே உள்ள காண்டிராக்டரிடம் கொடுத்து வைக்க சொல்லி உள்ளார். அந்த காண்டிராக்டர் மின் கம்பத்தில் பேனரை சரியாக கட்டாமல் இருந்துள்ளார். அதனால்தான் காற்றில் கழன்று கீழே விழுந்துள்ளது. இதனால் அந்த காண்டிராக்டரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

click me!