பேரன் மீது அதிக பாசம் வைத்த தாத்தா ! குழந்தையை அனுப்ப மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் !

By Selvanayagam PFirst Published Jun 19, 2019, 8:25 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி அருகே  மகன் வயிற்றுப் பேரனை தானே வளர்க்கிறேன் என கூறி அடம் பிடித்த தந்தையை மகனும், மருமகளும் அடித்துக் கொன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி கூலி தொழிலாளியான. இவர் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் நாராயணகுண்டு பகுதியில் வசித்து வந்தார்.

நல்லதம்பியின் மகன் பாண்டியன்,  தனது மனைவி சுசீலா, மகன் தவனேஸ் ஆகியோருடன் புங்கவாடியிலேயே வசித்து வருகிறார். 1-ம் வகுப்பு படித்து முடித்துள்ள தவனேஸ் கோடை விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாராயணகுண்டுக்கு வந்து தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தான்.

இதற்கிடையே கடந்த 3-ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதையடுத்து தவனேசை வீட்டில் கொண்டு வந்து விடுமாறு பாண்டியன் தனது தந்தை நல்லதம்பியிடம் கூறியுள்ளார். ஆனால் பேரன் மீது வைத்துள்ள பாசத்தால் அவனை பிரிய மனமின்றி நல்லதம்பி, நாராயணகுண்டு பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் தவனேசை சேர்க்க முயன்றார். 

இதுபற்றி அறிந்த பாண்டியன், சுசீலா ஆகியோர் நாராயணகுண்டுக்கு வந்தனர். பின்னர் தவனேசை புங்கவாடியில் உள்ள பள்ளியிலேயே இரண்டாம் வகுப்புக்கு அனுப்பப் போவதாக நல்லதம்பியிடம் கூறியுள்ளனர். ஆனால் பேரனை பிரிய விரும்பாத நல்லதம்பி, அவனை அனுப்ப மறுப்பு தெரிவித்தார்.

இதனால் நல்லதம்பிக்கும், பாண்டியனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், சுசீலா ஆகியோர் நல்லதம்பியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். 

இதில் அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நல்லதம்பி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன், சுசீலா ஆகியோரை கைது செய்தார்.

பேரனை அனுப்ப மறுத்ததால் தொழிலாளி தனது மகன்-மருமகளாலேயே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!