ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை... ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2021, 2:20 PM IST
Highlights

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்த மாணவிகள் அளித்தப் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

முன்னதாக பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் "பல கறுப்பு புள்ளிகள்" உள்ளதாக விசாரணையில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலமாக அவர்களுடன் சேட் செய்வது, மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பச் சொல்வது போன்ற வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். வணிகவியல் (காமர்ஸ் & ஆக்கவுண்டன்ஸி) பாடத்தில் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக கடந்த 27 ஆண்டுகள் பத்மசேஷாத்திரி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார், ராஜகோபாலன்.இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், உஷாரான ராஜகோபாலன் தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படம், அவர்களுடன் பேசிய அந்தரங்க செய்திகள் ஆகியவற்றை டெலிட் செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதாரங்கள் கிடைத்த நிலையில், ராஜகோபாலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 
 
இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடவுள்ளது. சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!