என்னது வந்தது நாய் கறி இல்லையா?! பார்சலில் வந்த கறி என்ன? திடுக்கிடவைக்கும் அதிர்ச்சி தகவல்...

By sathish kFirst Published Nov 21, 2018, 9:08 PM IST
Highlights

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்துசென்னை எழும்பூர் வரும் ரயிலில் பதப்படுத்தப்படாத இறைச்சி கொண்டுவரப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் – சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நேற்று சோதனை மேற்கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்துசென்னை எழும்பூர் வரும் ரயிலில் பதப்படுத்தப்படாத இறைச்சி கொண்டுவரப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் – சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது 24 பார்சல் பெட்டிகளில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. முறையாக  பதப்படுத்தப்படாமல் எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் அந்த இறைச்சி கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த இறைச்சி எந்த விலங்குடையது என்று ஆய்வு செய்வதாக கூறி அதிகாரிகள் சில சோதனைகளை செய்தனர். உடனடியாக ஜோத்பூர் ரயிலில் வந்திருப்பது நாய்கறி என்றும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர உணவகங்களுக்கு விற்க கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவலை கசியவிட்டனர். இதனால் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பேசும் பொருளானது.

உடனடியாக ரயில் நிலையத்திற்கு வந்த இறைச்சிக்கு சொந்தக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஆட்டு இறைச்சியை எப்படி நாய் இறைச்சி என்று கூறலாம்? எந்த அடிப்படையில் ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்கிறீர்கள்? இறைச்சியை சோதனைக்கு உட்படுத்தாமல் எப்படி நாய் இறைச்சி என்று சொல்லலாம் என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் செய்வது அறியாது திகைத்த அதிகாரிகள் ஓரமாக ஒதுங்கினர்.

மேலும் இறைச்சி கடை உரிமையாளர்கள் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி ஏற்றப்பட்ட வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாய் இறைச்சி என்று உறுதியாவதற்கு முன்னதாகவே அதிகாரிகள் எப்படி அவற்றை எடுத்துச் சென்று அழிக்கலாம் என குரல் எழுப்பினர். ஆனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி வாகனத்தை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பார்சலில் வந்த கறி என்ன கறி குழப்பத்தில் உள்ள நிலையில்,   தற்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், ஜோத்பூரில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த பார்சலில் உள்ளே இருப்பது மீன் என குறிப்பிடப்பட்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடாக பார்சல் அனுப்பியதற்கு உடந்தை எனக்கூறி சென்னையைச் சேர்ந்த முகவர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த கறி விவகாரம்  குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஜோத்பூருக்கு பயணப்பட உள்ளது. இதனால் சர்ச்சை வலுத்திருக்கிறது. முழுமையான அறிக்கை வெளியாக இன்னும் சிலநாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!