ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. இவர் 16 நாட்களுக்கு முன்பு தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியில் சேர்ந்தார். இதற்காக தினந்தோறும் தர்மாவரம் சென்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வங்கிக்கு சென்றார்.ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தர்மாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், வேலைக்கு சென்ற எங்கள் மகள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருக்கு கார்த்தி, ராஜேஷ் ஆகியோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர் என தெரிவித்தனர். ஆனால், போலீசார் உன் மகள் சிறு குழந்தை கிடையாது வீட்டிற்கு வந்துவிடுவார் என போலீசார் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். புகாரை வாங்கிய போலீசார் அது குறித்து விசாரிக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடியது. அப்போது, தர்மபுரம் சாலையின் அருகே உள்ள முட்புதரில், அடையாளம் தெரியாத இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அது சினேகலதா என தெரியவந்தது. மேலும், அவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து சினேகாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேஷ் என்ற காமகொடூரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.