பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் காதலியுடன் மது அருந்திக் கொண்டிருந்த ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் காதலியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பழிவாங்கும் கொலைகள், கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. இக்குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் பழைய குற்றவாளிகளை குறிவைத்து வேட்டையாடி வரும் நிலையில், மீண்டும் ஒரு பயங்கர கொலை சென்னை ஆதம்பாக்கத்தில் அரங்கேறியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாகூர் மீரான், இவர் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆதம்பாக்கத்தை விட்டு திருவள்ளூர் சென்று வசித்து வந்தார். நாகூர்மீரானின் காதலி அவரை அழைத்ததன் பேரில் சென்னை ஆதம்பாக்கம் வந்த அவர், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவில், காதலி வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் நாகூர் மீரானை சரமாரியாக வெட்டியது. அதில் நாகூர்மீரான் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்த அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில், மின்னல் வேகத்தில் மறைந்தது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகூர் மீரானின் காதலியை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி பவுல் என்பவர் இந்தக் கொலையை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது காதலி நாகூர்மீரானை திட்டமிட்டு வரவழைத்தாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.