மதுரையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த ரௌடி வீடு புகுந்து வெட்டி படுகொலை

By Velmurugan sFirst Published Jan 25, 2023, 7:17 PM IST
Highlights

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த மேல உறங்கான்பட்டியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ரௌடி அழகுபாண்டியை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி. இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அழகுபாண்டி மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவர் மட்டும் ஆந்திர மாநிலத்தில் தங்கியிருந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

அழகுபாண்டி ஆந்திராவிற்குச் சென்றதைத் தொடர்ந்து அவரது மனைவி தனது குழந்தைகளுடன் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த மேலஉறங்கான்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அழகுபாண்டி மீதான வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து அவர் வராமல் இருந்ததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மானார் வீட்டிற்கு வந்தார். அழகுபாண்டி வந்திருந்ததை அறிந்த சிலர் அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டனர். அதன்படி அழகுபாண்டி நேற்று இரவு மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் சிலர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.

சந்தேகத்துடன் கதவு திறக்கப்பட்ட நிலையில், வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் அழகுபாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!