வண்டியில் ‘ப்ரஸ்’ ஒட்டி வழிப்பறி... கொள்ளையனால் நிருபர்களுக்கு வந்த சோதனை..!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2019, 1:08 PM IST
Highlights
சென்னையில் விதம் விதமான வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. பூவிருந்தவல்லி அருகே அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது.

சென்னையில் விதம் விதமான வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. பூவிருந்தவல்லி அருகே அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது.

காட்டுப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்த தனலட்சுமி, டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தனலட்சுமியை வெகு தொலைவில் இருந்தே தொடர்ந்து வந்துள்ளார். அப்போது தனலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் சங்கிலியை விடவில்லை. ஆத்திரமடைந்த கொள்ளையன் தனலட்சுமியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, வலியால் பதறிய அவர் கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் சிலர், தப்ப முயன்ற கொள்ளையனை விரட்டிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். காவல்துறை விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர் அயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது. பத்திரிகையாளர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வைத்திருந்ததும், இருசக்கர வாகனத்தில் PRESS என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வலம் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

வழிப்பறி நடந்த இடத்தில் வழக்கமாக எரியும் மின் விளக்குகள் சம்பவத்தின்போது எரியவில்லை. அதனால், மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, அங்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதும், மின்விளக்குகளை யாரோ ஸ்விட்ச் ஆஃப் செய்திருப்பதும் தெரியவந்தது. 


வழிப்பறிக்கும், மின்விளக்குகள் அணைக்கப்பட்டதற்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு எழுந்த சந்தேகம், விசாரணையில் உறுதியானது. வழிப்பறி செய்யச் செல்லும் சிவக்குமார், அதற்கு வசதியாக அங்குள்ள தெரு விளக்குகளை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார். தெரு விளக்குகளுக்கு அருகிலே அதன் ஸ்விட்ச் இருப்பதால், அந்த வேலை அவருக்கு எளிமையாக இருந்துள்ளது.
 
யாருக்கும் சந்தேகம் ஏற்படாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறுகிறது. அதன்பின், சிவக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம், கத்தி, மிளகாய்ப்பொடி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் PRESS அல்லது MEDIA ஸ்டிக்கருடன் வாகனங்களை நிறுத்தி சோதனையிட சென்னை போலீஸ் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

click me!