ராமேஸ்வரம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை... இறால் பண்ணைக்கு சீல்!!

By Narendran SFirst Published May 25, 2022, 4:21 PM IST
Highlights

ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது  தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. 

ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது  தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா. 45 வயதான இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சந்திராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன.

இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அதனால், போலீசாருடன் சென்ற பொதுமக்கள் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீவைத்தனர். 6 வடமாநில இளைஞர்களையும் சராமாரியாகத் தாக்கினர். பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், ராமேஸ்வரம் வடகாடு பெண் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் காலையிலிருந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டமாக சாலையில் அவரது உறவினர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, இறால் பண்ணைகளை முற்றிலுமாக ராமேஸ்வரம் பகுதியில் அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் இறுதிகட்ட முடிவில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு குடும்பத்திற்கு நிதி வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும், லைசென்ஸ் இல்லாத இறால் பண்ணைகள் முற்றிலும் அகற்றப்படும் என கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சாலையில் டயர்களை போட்டு எரித்து அதன் விளைவாக போக்குவரத்து முற்றிலுமாக ஆறு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு கூட்டத்தினர் கலைக்கப்படனர். இதனிடயே ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது  தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில நபர்கள், பணியாற்றிய இறால் பண்ணை முறையான அனுமதியின்றி இயங்கியதால் சீல் வைத்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

click me!