பாஜக பிரமுகர் கொலை வழக்கு... சபதம் போட்டு தீர்த்துக்கட்டிய ரவுடி.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

By vinoth kumarFirst Published May 25, 2022, 3:05 PM IST
Highlights

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனிடம் எத்தனை நாள் பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்று பார்ப்போம். என்றாவது ஒருநாள் அவரை தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறியுள்ளனர். இப்படி ரவுடி பிரதீப் சபதம் போட்டு பாலச்சந்தரை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்ததையடுத்து தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாலச்சந்தர் தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன்  சாமிநாயக்கன் தெரு, நித்யா ஹார்டுவேர்ஸ் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென 3 பேர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் சுத்துபோட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவரை வெட்டி கொன்ற 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர். இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியில் பாலச்சந்தரை வெட்டிக்கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலச்சந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப் தனது கூட்டாளிகளான சஞ்சய், கலைவாணன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டு போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக கொலையுண்ட பாலச்சந்தரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலச்சந்தரின் சகோதரர் ஒருவர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு பிரதீப் அடிக்கடி சென்று மாமூல் கேட்டுள்ளார். மேலும், பாலச்சந்தரின் உறவினர் கடையில் அடிக்கடி துணி எடுத்துவிட்டு ரவுடி பிரதீப்பின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் பாலச்சந்தர் அதனை தட்டிக்கேட்டுள்ளார். மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த பிரதீப் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாலச்சந்திரனுக்கு பாதுகாவலராக கடந்தாண்டு வீரபத்திரன் என்ற காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதே, அவரிடம் பிரதீப், சஞ்சய் மற்றும் கலைவாணன் ஆகிய 3 பேரும்  பாதுகாவலர் வீரபத்திரனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியில் வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரதீப் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் வெளியில் வந்துள்ளான். நேராக பாலச்சந்தரின் உறவினரின் துணிக்கடைக்கு சென்று என் வழியில் அடிக்கடி கறுக்கே வருகிறான் பாலச்சந்தர். அவரை கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணனிடம் எத்தனை நாள் பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்று பார்ப்போம். என்றாவது ஒருநாள் அவரை தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறியுள்ளனர். இப்படி ரவுடி பிரதீப் சபதம் போட்டு பாலச்சந்தரை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

click me!