
ரயில் நிலையத்தில் வைத்து கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம்
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபள்ளே ரயில்நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர் தம்பதி குழந்தைகளுடன் ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார். ரயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் மது போதையில் வந்த 3 பேர் இளம்பெண்ணின் கணவரை எழுப்பி மணி என்ன எனக் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் கடிகாரம் இல்லை என பதில் கூறிய நிலையில், 3 பேரும் அந்த கணவரை அடித்து அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த மனைவி வாலிபர்களிடம் இருந்து தனது கணவரை மீட்க முயற்சி செய்தார்.
கர்ப்பிணி பலாத்காரம்
இதனையடுத்து, 3 பேரும் சேர்ந்து கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர். கணவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி அருகே இருந்த காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி உதவி கேட்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவியின் காட்சிகளின் அடிப்படையில் 3 பேரையும் கைது செய்தனர்.
கைது
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறார் என்பது தெரியவந்தது. குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேர் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு, திருட்டு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.