பெங்களூரைச் சேர்ந்த ஒரு டீம் என்னை அடியாட்களை வைத்து சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்திவிட்டது என `பவர்ஸ்டார்' சீனிவாசன் டுபாக்கூர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
பலபேரிடம் லோன் வாங்கித்தருவதாக ஏமாற்றிய பணத்தை வைத்து, அந்த காசில் படம் நடித்து, அந்த பணத்தில் 100 நாட்களுக்கு மேல் தனது படத்தை ஓட்டி தெலுங்கு நடிகர் பவர்ஸ்டாரை பின்னுக்குத் தள்ளி கூகுளை கன்பியூஸ் செய்தது மட்டுமல்லாமல்
சந்தானத்தோடு நடிக்கும் அளவிற்கு வளர்ந்த பவர்ஸ்டார். தொடர்ந்து பல படங்களில் காமெடியில் கலக்கி வந்தார்.
இவர் மீது பல பேரிடம் பல கோடிகளை அபேஸ் வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், பவர்ஸ்டாரின் மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் கணவர் காணவில்லை என புகார் அளித்துள்ளார். பல்வேறு மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திய போலீசாருக்கு பல ட்விஸ்ட் அதிர்ச்சியே மிஞ்சியது
அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நடிகர் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சீனிவாசனைத் தேடி அவரின் மனைவி ஜூலி ஊட்டிக்குச் சென்றார். இதனையடுத்து ஜூலை எந்த தகவலும் கொடுக்கவில்லை, சீனிவாசனைத் தொடர்ந்து ஜூலியும் மாயம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னணி வார இதழ் நிருபர்களுக்கு போனில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது ``என்னைக் கடத்தியது உண்மை. இப்போது நான் என் மனைவியுடன் ஊட்டியில் இருக்கிறேன். பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் எனக்கும் பணக் கொடுக்கல் பிரச்னை இருந்துவருகிறது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் சமயத்தில் என்னை அந்த பெங்களூரு டீம் கடத்திவிட்டது. நான் பேச முடியாத இடத்தில் இருக்கிறேன். நடந்த சம்பவத்தை முழுமையாக உங்களிடம் தெரிவிக்கிறேன்" என தொலைபேசி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசனின் குடும்பத்தினர் கூறிய கடத்தல் புகார் சென்னை போலீஸாரை திணறடித்துள்ளது.