இதுக்காக யாராவது கல்யாணத்தை நிறுத்துவாங்களா ? தாலி கட்டும் நேரத்தில் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 10, 2018, 11:51 AM IST
Highlights

ஆரணி அருகே கல்யாண மண்டபத்தில் திமுக பேனர் மற்றும் கொடி கட்டப்பட்டதால்  அதிருப்தி அடைந்த அதிமுகவைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணப் பெண் இப்பவே தகராறு செய்பவர்கள் திருமணத்துக்குப்  பிறகு எப்படி இருப்பார்கள் என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர். மேலும் தி.மு.க. கட்சி கொடி கட்டியிருந்தனர்.

நேற்று இரவு மணமக்கள் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த திமுக பேனரால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி திமுக  பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது மோதலாக மாறி ,  கைக்கலப்பில் முடிவடைந்தது.

இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.

இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

ஆனால் மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என முயற்சி  செய்தனர். இதையடுத்து  ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!