கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா- நரபலி கொடூரம்
கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மந்திரவாதியான ஷாபி, மருத்துவ தம்பதியையும், நரபலி கொடுத்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதியான ஷாபி, தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் 'ஸ்ரீதேவி' என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். அதில் இருந்து மருத்துவர் பகவல் சிங்கும், மற்றும் அவரது மனைவி லைலாவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அப்போது இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்ற தங்களது ஆசையை கூறியுள்ளனர். இதனையடுத்து நரபலி கொடுத்தால் உடனடியாக செல்வம் பெருகும் என ஷாபி கூறியுள்ளார்.
நிர்வாணபடம்- பல லட்சம் பணம்
இதனை பகவல் சிங்கையும் நம்ப வைத்துள்ளார். மேலும் நரபலிக்கு தேவையான பெண்களை தானே அழைத்து வருவதாக கூறிய போலி மந்திரவாதி ஷாபி, கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி எர்ணாகுளம் காலடியில் லாட்டரி வியாபாரம் செய்துவந்த ரோஸ்லி என்ற பெண்ணையும் பண ஆசை காட்டியுள்ளார். நிர்வாண படத்தில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என கூறி ரோஸ்லியை நம்பவைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இந்த நரபலி கொடுத்தும் எந்த செல்வமும் வராத காரணத்தால் மீண்டும் நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த மாதம் 26-ம் தேதி எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று வந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர். பத்மாவை நரபலி கொடுத்தப் பிறகு சில பூஜைகள் செய்துள்ளார் முகமது ஷாஃபி. பின்னர் உடலை 56 துண்டுகளாக வெட்டியுள்ளனர்.
மனித மாமிசம் சாப்பிட்ட தம்பதி
கழுத்தை கத்தியால் அறுத்தவர்கள், கைகளையும், கால்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிறு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளனர். மேலும், ``அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்" என முகமது ஷாஃபி கூறியுள்ளார். பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் உடலின் சிறிது பாகத்தை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த நரபலி தொடர்பாக கூடுதல் தகவல் தெரிவித்த கொச்சி காவல் துறை ஆணையர் நாகராஜு, இரண்டு பெண்களும் காணாமல் போன இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். போலி மந்திரவாதி ஷாபி தான் நரபலி கொடுக்க பகவல் சிங்கை சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறினார். இதற்காகவே ஒரு கதையை உருவாக்கி மூன்று ஆண்டுகளாக தம்பதியுடன் பேசிப்பழகி அவர்களை இணங்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை கண்டறிய செல்போன் சிக்னலும், சிசிடிவி காட்சிதான் முக்கிய தடையமாக சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.
காணமல் போன 12 பெண்கள்
செப்டம்பர் 26ஆம் தேதி பத்மா காணாமல் போன நாள் முதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பத்மா பத்தனம்திட்டாவில் உள்ள லைலா சிங்கின் வீட்டை நோக்கி சென்றதும் இதனையடுத்து லைலா சிங் வீட்டுக்குள் பத்மா செல்வது தெரியவந்ததாக விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பல பெண்கள் நரபலியில் கொடுக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 12 பெண்கள் கணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
நாங்குநேரி சாமிதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கே ட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!