
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்ததாக காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிபோதை
மயிலாப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (36). மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர், போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 2ம் தேதி மனைவி மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 6 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
சஸ்பெண்ட்
இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக காவலர் ஜெயசந்திரன் மீது வழக்கு பதிவு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மது அருந்த பணம் இல்லாததால் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதை பார்த்த காவலர் ஜெயசந்திரன், குடிக்க பணம் இல்லாதால் நேற்று முன்தினம் காவல் நிலைய பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த பறிமுதல் மொபட் ஒன்றை காவலர்களுக்கு தெரியாமல் திருடி எடுத்து சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் திருட்டு
பின்னர், அதை தனது கூட்டாளிகளான மயிலாப்பூரை சேர்ந்த கார் டிரைவர் அருள்பிரகாஷ் (52), லஸ் கார்னர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் நாகராஜன் (50) ஆகியோர் உதவியுடன் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் விற்க முயன்றுள்ளார். அப்போது, கடை உரிமையாளர் கபிலன் (40), மொபட்டில் மயிலாப்பூர் காவல் நிலைய குறியீடு இருக்கிறதே என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயசந்திரன், இது என்னுடைய வண்டிதான் நான் போலீஸ் என்று கூறி வாகனத்தை எடை போட்டுவிட்டு, அதற்கான பணத்தை தரும்படி கூறியுள்ளார். சந்தேகமடைந்த கடை உரிமையாளர், சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
கைது
அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட மொபட்டை காவலர் ஜெயசந்திரன் திருடி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் காவலர் ஜெயசந்திரன், அவரது கூட்டாளிகளான கார் டிரைவர் அருள் பிரகாஷ், நாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.