
ஆந்திராவில் திருமணம் செய்ய விருப்பமில்லாத இளம்பெண் மணமகனை வீட்டிற்கு அழைத்து செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா அனாகபள்ளி மாவட்டம் மாடுகுலப்பள்ளி மண்டலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமாநாயுடு. 28 வயதான இவர் ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பி.எச்.டி படித்து வருகிறார். ராமா நாயுடுவுக்கும் ராதிக மாட்டம் கிராமத்தை சேர்ந்த 22 வயதான புஷ்பா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதை ஏற்க மற்றுத்து பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகளை செய்தனர். அதன் ஒருபகுதியாக புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்றனர். அப்போது புஷ்பா, மணமகனை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறி அழைத்துள்ளார்.
அதை கேட்டு வீட்டிற்கு வந்த மணமகனிடம் திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என கூறிய புஷ்பா, கேக் வாங்கி வந்து வீட்டில் வைத்து வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். பின்னர் சர்ப்ரைஸ் கிப்ட் தரப்போவதால் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என கூறிய புஷ்பா, தன்னுடைய துப்பட்டாவால் ராமாநாயுடு கண்ணை கட்டினார். தனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்த ராமாநாயுடு, கண்களை கட்டிக்கொண்டு காத்திருந்தார். அப்போது புஷ்பா தான் திட்டமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமாநாயுடு கழுத்தை திடீரென அறுத்தார். இதில் ராமாநாயுடு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
பின்னர் புஷ்பா அவரை அனகா பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவரிடம் ராமாநாயுடு தடுக்கி கத்தியின் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் ராமாநாயுடுவை அனுமதித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து புதிய பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில் புஷ்பா திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணமகனை திட்டமிட்டு கழுத்தை அறுத்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள புஷ்பாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.