எங்களையே டீச்சர் கிட்ட மாட்டி விட்ரியா! வீடு புகுந்து அண்ணன்,தங்கைக்கு அரிவாள் வெட்டு!அதிர்ச்சியில் தாத்தா பலி

By vinoth kumarFirst Published Aug 12, 2023, 7:05 AM IST
Highlights

ஆசிரியர்கள் அந்த மாணவர்களை கூப்பிட்டு கண்டித்து கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் 9ம் தேதி இரவு சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி – அம்பிகா தம்பதியரின் மகன் சின்னத்துரை(17), சந்தானசெல்வி (15) என்ற மகளும் உள்ளனர். இருவரும் வள்ளியூர் கண்டிகார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பள்ளியில் படித்து வந்த நாங்குநேரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்துள்ளது. இதனால், சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்வலில்லை. இதனை அவரது தாத்தா கண்டித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார். கடந்த 9ம்தேதி பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் வகுப்பு ஆசிரியர் விசாரித்த போது, சக மாணவர்கள் சிலர் அவதூறாக பேசுவதால் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம் - இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் மோகன் ஜி கடும் கண்டனம்!

இதனையடுத்து ஆசிரியர்கள் அந்த மாணவர்களை கூப்பிட்டு கண்டித்து கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் 9ம் தேதி இரவு சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைத் தடுத்த தங்கை சந்தானலட்சுமிக்கும் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் அவர்கள் தங்கிருந்து தப்பித்தனர். படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பேரன், பேத்தி அரிவாளால் வெட்டப்பட்டதை பார்த்த அதிர்ச்சியில் கிருஷ்ணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இதையும் படிங்க;-  நாங்குநேரி சம்பவம்.. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு ஊடுருவி உள்ளது - முதல்வர் ஸ்டாலின் வருத்தம்!

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இதுவரை 6 மாணவர்கள் கைதாகியுள்ள நிலையில் தலைமறைவாகவுள்ள மேலும் ஒரு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!