கர்ப்பிணி பெண் சாவில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அடித்துக்கொன்ற கொடூரம்.. தற்கொலை நாடகமாடியது விசாரணையில் அம்பலம்!!

By Asianet TamilFirst Published Sep 24, 2019, 12:58 PM IST
Highlights

ராணிப்பேட்டை அருகே கர்ப்பிணி பெண்ணை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அம்மூர் அருகேயிருக்கும் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம்(23 ). இவரது மனைவி தனலட்சுமி(19 ).  இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பவித்ரா என்ற குழந்தை இருக்கிறது.  செல்வம் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

இதனிடையே தனலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 18ம் தேதி  வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

தனலட்சுமியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் கண்ணன் என்பவர் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகுவதால் தனலட்சுமியின் மரணம் குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணையில் ஈடுபட்டார்.

இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக தனலட்சுமியை அவருடைய கணவர் செல்வமே அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் உதவி கலெக்டர் நடத்திய விசாரணையில் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அடித்து கொலை செய்ததாக செல்வம் கூறியிருக்கிறார்.

சம்பவத்தன்று வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வம் தனலட்சுமி சேலை விலகிய படி தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்து இருக்கிறார். இதனால் அவரை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனலட்சுமியை சேலையில் கட்டி தூக்கில் தொங்க விட்டிருக்கிறார். இதை பார்ப்பவர்கள் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்புவார்கள் என நினைத்து அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். 

கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!