மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணன்.. ஆத்திரத்தில் கடப்பாரையால் அடித்துக் கொன்ற தம்பி!!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 5:25 PM IST
Highlights

கும்பகோணம் அருகே குடித்துவிட்டு வந்து தகராறு செய்த அண்ணனை கடப்பாரைக் கொண்டு அடித்து கொன்ற தம்பியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருக்கும் பந்தநல்லூரைச் சேர்ந்தவர் பாஸ்கர்(42). இவரது தம்பி அசோக். இவர்கள் இருவரும் தங்கள் தாயுடன் அந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.பாஸ்கர் சிறு வயதில் இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து தாயிடமும் தம்பியுடனும் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

சம்பவத்தன்றும் நன்றாக குடித்திருக்கிறார் பாஸ்கர். மது போதையில் வீட்டிற்கு வந்த அவர் தாயிடம் வழக்கம் போல சண்டை போட்டிருக்கிறார். தனது தம்பி அசோக்கை மூங்கில் கம்பால் அடித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அசோக் பாஸ்கரை தாக்க தொடங்கியிருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த இரும்பு கடப்பாரையை எடுத்து தனது அண்ணனின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் அசோக். தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாஸ்கர் பலியாகி இருக்கிறார். அதை பார்த்ததும் அசோக் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த பந்தநல்லூர் காவல்துறையினர் பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அசோக்கை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை ஆத்திரத்தில் தம்பியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!