
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வந்த இரண்டும் மாணவர்களின் லேப்டாப்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போயுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யபட்டன. அதில் மர்ம நபர் ஒருவர் லேப்டாப்களை திருடிச் செல்லும் காட்சி இருந்தது. இதனைதொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலிஸ் ஆய்வாளர் யமுனா தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு,லேப்டாப் திருடிய நபர் குறித்து தேடுதல் வேட்டை தொடங்கியது.
இந்நிலையில் தான், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர்தான் லேப்டாப் திருடன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சியில் பதிவான நபர் இவர் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்,அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும் இவருக்கு தாய் தந்தை இல்லை என்பதும், இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பு படித்ததும், மேலும் தொலைதூர கல்வி மூலமாக பி.எல் படித்ததும் தெரியவந்தது.
மருத்துவ மாணவரின் லேப்டாப்- யை திருடியதை ஒப்புக்கொண்ட நிலையிலும் நன்கு படித்திருப்பதால் அவர் மீது போலீசார் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனிப்படை போலிஸார் அவரிடம் தங்கள் பாணியில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி பயின்ற தமிழ்செல்வன், தன்னுடன் படித்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் காதல் தோல்வியில் முடிந்ததால் ஆத்திரத்தில் திருடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் ,இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை காலண்டரில் அட்டவணை போட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் தினமும் சென்று இரண்டு லேப்டாப்கள் வீதம் டார்கெட் செய்து லேப்டாப்களை திருடி வந்துள்ளார்.
மேலும் தான் திருடிய லேப்டாப்கள் அனைத்தையும் அதன் வெளித்தோற்றத்தை மாற்றி ஓ.எல்.எக்ஸ் யில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து செம்மஞ்சேரி பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தனிப்படை போலீசார் சோதனை செய்து அங்கிருந்த 31 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். வீட்டில் மாட்டிருந்த காலண்டரில் தினமும் ஒரு கல்லூரி என கல்லூரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து தொடர் திருட்டில் ஈடுப்பட்ட வந்த தமிழ்செல்வன் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.