திண்டுக்கல் அருகே பணம் கடன் கேட்ட பெண் ஒருவரை ஏமாற்றி லாட்ஜுக்கு அழைத்துச் சென்று கற்பழித்து அதை வீடியோவாக படம் பிடித்து மிரட்டி வந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர் ரோஜா. இவர் அங்குள்ள அனந்தகிரி பகுதியில் கவரிங் நகை விற்பனை கடை ஒன்றில் பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்த சசி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்த ரோஜா, அவ்வப்போது அவரிடம் கடனாக பணம் பெற்றுச் செல்வதும் வாடிக்கை என்று கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ரூ. 5,000 தேவைப்படுவதாக சசியிடம் ரோஜா கூறியிருக்கிறார். அப்போது பணத்தை வத்தலகுண்டுவில் தான் சொல்லும் இடத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளும் படி ராஜா கூற, அவரின் வார்த்தையை நம்பி ரோஜாவும் வத்தலகுண்டு சென்றிருக்கிறார்.
வத்தலகுண்டு வந்த ரோஜாவிடம் அருகில் உள்ள ஓட்டலுக்கு வரச்சொன்ன சசி, அவரை ஓட்டல் அறையில் வைத்து கற்பழித்ததோடு அதை வீடியோவும் எடுத்து வைத்து இரு நாட்களாக மிரட்டி வந்திருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த ரோஜா, சசி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ரோஜாவின் புகாரையடுத்து, சசியை கைது செய்துள்ள காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை, பெண்ணை அவமதித்தல், தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.