மனைவி இருப்பதை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் தற்போது பணம், நகைகளை பறித்துக்கொண்டு தன்னை தவிர்ப்பதாக திருநங்கை ஒருவர் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டிணத்தை சேர்ந்தவர் திருநங்கையான பபிதா ரோஸ். இவரது "ரோஸ்" டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல்வேறுப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் திருநங்கைகளுக்கு எதிராக, திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர் பேசியது சர்ச்சைக்குள்ளாக இவரது வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், திருநங்கை பபிதா ரோஸின் வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது, அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்திக்க செல்ல, இருவருக்கும் காதல் உண்டானது. இதையடுத்து திருநங்கை பபிதா ரோசை விஜய சண்முகநாதன் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் விஜய சண்முகநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து திருநங்கை பபிதா ரோஸை அவர் திருமணம் செய்தது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் எஸ்.ஐ. தன்னை ஏமாற்றி திருமணம் செய்து நகைப் பணத்தை அபகரித்துக் கொண்டதாக அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் மீது மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமாரிடம் திருநங்கை பபிதா ரோஸ் புகார் அளித்துள்ளார்.