
காட்டுமன்னார்கோயில் அருகே கருத்து வேறுபாடு காரணமாக கள்ளக்காதலி கழுத்தை அறுத்த வாலிபரை பொதுமக்கள் மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி செல்வி என்பவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேவ புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர்க்கும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடையே மாமங்கலம் கிராமத்திற்கு சென்ற திருநாவுக்கரசு செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் போது வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தர். இதனையடுத்து, செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓட முயற்சித்த திருநாவுக்கரசை பொதுமக்கள் மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருநாவுக்கரசை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதான் காரணமாக பெண்ணை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.