மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு.. மக்கள் அதிர்ச்சி..

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2021, 1:33 PM IST
Highlights

கூல்டிரிங்ஸ் குடித்த சில மணித்துளிகளில் சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார். மூக்கில் இருந்து இரத்தம் கலந்த சளி வந்துள்ளது. பயந்து போன சிறுமியின் சகோதரி (அக்கா) உடனடியாக தனது அம்மாவை அழைத்து வந்துள்ளார்.

சென்னை பெசண்ட் நகர் மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெசன்ட் நகர், ஓடை மாநகரில் வசித்து வருபவர் சதீஷ், காயத்ரி தம்பதி, இவர்களது இளைய மகள் தரணி(13), இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் (Togito cola) மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார். 

கூல்டிரிங்ஸ் குடித்த சில மணித்துளிகளில் சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார். மூக்கில் இருந்து இரத்தம் கலந்த சளி வந்துள்ளது. பயந்து போன சிறுமியின் சகோதரி (அக்கா) உடனடியாக தனது அம்மாவை அழைத்து வந்துள்ளார். வந்து பார்த்த போது சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியிருந்தது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிறுமி குடித்த பாட்டலில் இருந்த சிறிதளவு கூல்டிரிங்ஸ்சை ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் கையகப்படுத்தியுள்ளனர். அப்பகுதி மளிகை கடையில் தொடர்ச்சியாக தரமற்ற பொருட்கள் விற்கபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூல்டிருங்ஸ் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!