ராங் கால் மூலம் இளைஞனை மயக்கி கத்தி முனையில் பணம் பறிப்பு; திண்டுக்கல்லில் துணீகரம்

By Velmurugan sFirst Published Mar 22, 2023, 5:31 PM IST
Highlights

திண்டுக்கல்லில் ராங் கால் மூலமாக இளைஞனை மயக்கி குண்டர்கள் மூலமாக கத்தி முனையில் கடத்திச் சென்று ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்த கும்பல் 3 பேர் கைது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் யூசுப்  நகரை  சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 22). கல்லூரி படிப்பு முடித்து கடைவீதி பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராங் கால் மூலமாக 30 வயது மதிக்கத்தக்க பெண் தொலைபேசியில்  அழைப்பு விடுத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக அந்த இளைஞருக்கு வாட்ஸ் அப் மூலமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய நண்பர்களான சாலை தெருவை சேர்ந்த சுல்தான் மற்றும் அரபாத், கொல்லம்பட்டரையைச் சேர்ந்த ஜீவா ஆகிய மூவர் திண்டுக்கல்லில்  ஜவுளி எடுத்து வரலாம் என்று இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்கள். அழைத்துச் சென்றதில் வேடசந்தரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காக்கா தோப்பு தேசிய நெடுஞ்சாலை புற வழி பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.

பின்பு திண்டுக்கல்லில் இருந்து மேலும் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுடன்  அப்பாஸ் என்ற இளைஞரை அனுப்பி வைத்துவிட்டு பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்பு வத்தலகுண்டு அருகே வனப்பகுதியில் அப்பாஸை பாடலுக்கு நடனம் ஆட வைத்து கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளார்கள்.

கடுமையாக தாக்கியதில் கை, கழுத்து, காது பகுதியில் பலத்த காயம் அடைந்த இளைஞரை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டு மிட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பாஸின் தந்தையான ஹக்கீம் சேட் கடத்திச் சென்ற மர்ம நபர்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து இளைஞனை  மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணுடன் ஏற்பட்ட சவகாசத்தால் தன் மகன் பாதிக்கப்பட்டது ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் மரியாதையாக இருக்காது என்று எண்ணி அவரை தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக வேடச்சந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளைஞரின் நண்பர்களான சாலை தெருவைச் சேர்ந்த சுல்தான் மற்றும் அரபாத், கொல்லம் பட்டரையைச் சேர்ந்த ஜீவா ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இளைஞரிடம் வீடியோ காலில் பேசிய திண்டுக்கலை சேர்ந்த மேரி என்ற பெண் உள்பட ஐந்து பேரை வேடசந்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் வலைவீசி தீவிரமாக தேடி வருகிறார்கள். 

click me!