பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற தந்தை..! பெண்குழந்தை பிறந்ததால் வெறிச்செயல்..!

By Manikandan S R SFirst Published Nov 6, 2019, 1:44 PM IST
Highlights

விழுப்புரம் அருகே பச்சிளம் பெண்குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இருக்கிறது வடமருதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் வரதராஜ்(27). இவருக்கும் சவுந்தர்யா(19) என்கிற பெண்ணிற்கும் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு சவுந்தர்யா கர்ப்பமடைந்துள்ளார். அப்போதே அவரது மாமனார் துரைக்கண்ணு, ஆண்குழந்தை தான் பெற்று கொடுக்கவேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்.

ஒருவேளை பெண்குழந்தை பிறந்தால், அதை தந்தையும் மகனும் சேர்ந்து கொன்று விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார். இது சவுந்தர்யாவிற்கு மனா உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து தனது பெற்றோரிடம் சவுந்தர்யா கூறியுள்ளார். அதற்கு அவர்கள் அப்படியெல்லாம் ஒன்று நடந்துவிடாது என்று தைரியம் கூறியுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 20ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சவுந்தர்யா சுந்தரேசபுரத்தில் இருக்கும் தாய் வீட்டில் வந்து தங்கி ஓய்வு எடுத்துள்ளார். அங்கு வந்து அவரது கணவர் வரதராஜ் அவரை பார்த்துள்ளார். பின்னர் அத்தண்டமருதூரில் இருக்கும் தனது காட்டுக்கொட்டாய் வீட்டிற்கு மனைவியையும் மகளையும் வரதராஜ் அழைத்துச் சென்றிருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சவுந்தர்யா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தனது அருகில் தூங்க வைத்துள்ளார். நேற்று அதிகாலை விழித்து பார்த்தபோது குழந்தை அவரருகே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கணவரை எழுப்பி கேட்டுள்ளார். அதற்கு வரதராஜ் தனக்கு தெரியாது என்று முன்னுக்குப்பின் முரணாக கூறியிருக்கிறார். அதில் சந்தேகமடைந்த சவுந்தர்யா உறவினர்களுடன் சேர்ந்து தேடி பார்த்துள்ளார். அப்போது அங்கிருக்கும் ஆற்றுப் பகுதியில் குழி தோண்டப்பட்டு முடியதற்கான தடம் இருந்தது. உடனடியாக உறவினர்கள் குழியை மீண்டும் தோண்டி பார்த்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: மகன் இறந்த துக்கத்தில் உயிரைவிட்ட தந்தை..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!

அங்கே சவுந்தர்யாவின் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதைப்பார்த்து அவர் கதறி துடித்தார். உடனடியாக உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குழந்தையின் தந்தை வரதராஜ், தாத்தா துரைக்கண்ணு ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தபோது பெண்குழந்தை பிறந்ததால் குழந்தையை தூக்கிச் சென்று ஆற்றுப்பகுதியில் உயிருடன் புதைத்த கொடூரம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: 48 மணி நேரமாக கிணற்றில் தவித்த மூதாட்டி..! அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்பு..!

click me!