
சென்னையில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட கள்ளக்காதலனை காப்பாற்ற நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூறிய பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அபிராமி(38). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். 2017-ம் ஆண்டு இவரது கணவர் அருண் வேறு பெண்ணை திருமணம் செய்து செய்துகொண்டார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
2018-ம் ஆண்டு அபிராமி வெளியூர் சென்ற நேரத்தில் அவரது கள்ளக்காதலன் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அபிராமியின் முன்னாள் கணவரின் மகளான 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை சிறுமி தனது தாய் அபிராமியிடம் கூறினார். இதையடுத்து, இது குறித்தது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீது அபிராமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜார்ஜ் பெர்னாண்டஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணையின் போது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாள்தோறும் குடித்து விட்டு துன்புறுத்தியதால், அவர் மீது பொய் புகார் அளித்ததாக அபிராமி தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். இது பற்றி கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காப்பாற்ற அபிராமி முயன்றது தெரியவந்தது. இதன்படி, அபிராமியை போக்சோ வழக்கில் கைது செய்ய போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.