
சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர், போரூரை அருகேயுள்ள உள்ள தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்தபோது, அங்கு பயின்ற ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 ஆண்டுகளுக்கு பிறகு அளிக்கப்பட்ட புகாரில் அண்ணாநகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 7 ஆண்டுகளுக்கு பின்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்ப்புகார். மனுதாரர் 2 வாரங்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் உள்ளார்.
அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து விட்டனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், மனுதாரர் புகார் அளித்துள்ள மாணவியிடம் மட்டுமல்லாமல் தன்னிடம் பயிற்சி பெற்ற வேறு சில மாணவிகளிடமும் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதில், சிறுமிகளும் அடங்குவர். தனக்கு 13 வயதாக இருக்கும் போது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிய வாய்ய்பு உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.