
சேலத்தில் குடித்து விட்டு தகராறு செய்த கணவரை அரசு பள்ளி ஆசிரியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி இளமதி(30) இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த மணிகண்டனும் இளமதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இளமதி வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மணிகண்டன் குடித்துவிட்டு இளமதி மற்றும் குழந்தைகளுடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனிடையே, கடந்த 1ம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த மணிகண்டன் இளமதியை தாக்கியுள்ளார். அப்போது, ஆவேசமடைந்த இளமதி அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மணிகண்டனை தாக்கினார்.
இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இளமதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி முதற்கட்டமாக அரசுப்பள்ளி ஆசிரியையான இளமதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.