
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் தீவிர ஆதரவாளரான பாஜக எஸ்.சி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலசந்தர் போலீஸ் பாதுகாப்பையும் மீறி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்ததையடுத்து தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாலசந்தர் தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன் சாமிநாயக்கன் தெரு, நித்யா ஹார்டுவேர்ஸ் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றிருந்தார். திடீரென 3 பேர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கண் இமைக்கும் நேரத்தில் வந்து பாலசந்தரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். உயிர் பிழைக்க அவர் அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார். ஆனால் மூன்று பேரும் விடாமல் துரத்தி சென்று கொடூரமாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது.
இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த பாலகிருஷ்ணன் ஓடி வந்தார். அதற்குள் 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதை கண்ட பொதுமக்களும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொலை காரணமாக, அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பாலசந்தர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.