ஃபுல் மப்பில் மட்டையான ஆட்டோ டிரைவர்... வீடு புகுந்து கொத்துக்கறி போட்ட கொலை கும்பல்.. சென்னையில் பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2021, 4:05 PM IST
Highlights

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மதுபோதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மதுபோதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (எ) வினோத் (25). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இவர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு தனது நண்பரின் வீட்டில் மது போதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நவீனை மூன்று பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ்அவுஸ்  காவல்துறையினர் நவீனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் மற்றும் பழனி ஆகிய மூவரும் தான் முன்பகை காரணமாக நவீனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். 

பிரகாஷ், கார்த்திக் ,பழனி ஆகிய மூவரும் ஆர்.கே நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ததுடன், கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 

 

click me!