
ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டம் காசிம்கோட்டா நரசிங்கிபில்லி எனும் கிராம வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பட்டப்பகலில் வங்கி கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வங்கிக்கு நேற்று மதியம் சரியாக 2 மணி அளவில் மர்ம நபர் தலையில் ஹெல்மட் அணிந்தபடி நுழைந்தார். பின் நேரடியாக காசாளர் இருக்கும் பகுதிக்கு விரைந்த நபர், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து காசாளரை மிரட்டி கவுண்ட்டரில் இருக்கும் பணத்தை எடுத்து தனது பையில் வைக்குமாறு மிரட்டி இருக்கிறார். துப்பாக்கி முனையில் இருந்ததால் கவுண்ட்டரில் இருந்த ரூ. 3 லட்சம் 30 ஆயிரத்தை மர்ம நபரின் பையில் வைத்து இருக்கிறார்.
திட்டம்:
மதிய வேளை என்பதால், வங்கியில் உள்ள மற்ற ஊழியர்கள் உணவு இடைவெளிக்கு சென்று இருந்தனர். மேலும் வாடிக்கையாளர்களும் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன், வங்கி காசாளரை மிரட்டி பணத்தை பறித்து இருக்கிறார். மேலும் கொள்ளையன் இந்தி மொழியில் பேசி இருக்கிறான். கவுண்ட்டரை தொடர்ந்து லாக்கர் அறையில் உள்ள பணத்தை எடுக்க கொள்ளையன் காசாளரை மிரட்டி இருக்கிறான்.
எனினும், பொதுமக்கள் வரத் துவங்கியதை அடுத்து கிடைத்த பணத்துடன் கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறான். கொள்ளை சம்பவத்தை அடுத்து வங்கிக்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். காசிம்கோட்டா மற்றும் அனகாபள்ளி பகுதி முழுக்க அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
விசாரணை:
கொள்ளையடிக்க வந்தவன் தலையில் ஹெல்மட் அணிந்து இருந்ததால், அடையாளம் தெரியவில்லை. அனகாபரள்ளி எஸ்.ஐ. கௌதமி சாளி வங்கியை நேரில் வந்து பார்வையிட்டு அங்குள்ள கள நிலவரத்தை அறிந்து கொண்டார். கொள்ளையடிக்க வந்தவன் இந்தி மொழியில் பேசியதால் அவன் வடநாட்டை சேர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என போலிசார் தெரிவிக்கின்றனர். கொள்ளை சம்பவத்தை அடுத்து தடயவியல் நிபுணர்களும் வங்கியில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர கொள்ளையனை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.